உதவியாளர் இல்லாத பள்ளி வாகனங்களில் பாதுகாப்பில்லை : திடீர் ஆய்வு நடத்தினால் மட்டுமே தீர்வு


பந்தலூர் : பந்தலூர் பகுதியில் செயல்படும் பல தனியார் பள்ளி வாகனங்களில், உதவியாளர் இல்லாததால் மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் பிதர்காடு, அய்யன்கொல்லி, கையுன்னி, எருமாடு, உள்ளிட்ட இடங்களில் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 

                இந்த பள்ளிகளுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வந்து செல்வதால் பள்ளி நிர்வாகத்தின் கீழ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில பள்ளிகளை தவிர, பிற பள்ளிகளின் வாகனங்களில் டிரைவர் மட்டுமே உள்ளதுடன்; உதவியாளர் இல்லாமல் இயக்கப்படுகிறது. இதனால், மாணவர்கள் ஏறும்போதும், இறங்கும்போதும், வாகனங்களில் பயணிக்கும்போதும் போதிய பாதுகாப்பில்லாத சூழ்நிலை உள்ளது. இது குறித்து பி.டி.ஏ.நிர்வாகத்தினர் பள்ளி நிர்வாகிகளிடம் கேட்டால், "தனியாக சம்பளம் கொடுத்து உதவியாளர் நியமிக்க இயலாது; பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக சென்று வரவேண்டும் என்றால் அவர்களே ஒருங்கிணைந்து ஒரு உதவியாளரை நியமித்து கொள்ளலாம்,' என்ற அலசிய பதிலை தெரிவிப்பதாக, பெற்றோர் புகார் கூறுகின்றனர். 


இதுகுறித்து கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறுகையில், ""பள்ளி வாகனங்களில் மாணவர்களை ஏற்றிச்செல்லும் போது, அவர்களுடன் பள்ளி ஆசிரியர் ஒருவர்; உதவியாளர் ஒருவர் செல்ல வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதன் மூலம் மாணவர்களுக்கு பாதுகாப்பு ஏற்படும். ஆனால், ஒரு சில பள்ளி வாகனங்களை தவிர, மீதமுள்ள வாகனங்களில் உதவியாளர் இல்லாமல், மாணவர்கள் மட்டுமே ஏறி செல்வதால், பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படுவதுடன் பயணிக்கும்போதும், மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து தெரியாமல் போய்விடுகிறது. வெறுமனே சட்டங்களை மட்டுமே இயற்றாமல் போக்குவரத்து ஆய்வாளர்கள், கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி வாகனங்களை திடீர் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். அப்போது தான் மாணவர்களின் பாதிப்பு குறித்த உண்மை நிலை தெரிய வரும். வாகனங்களில் உதவியாளர் இல்லாமல்செயல்படும் பள்ளி வாகனங்களின் அனுமதியை ரத்து செய்ய வேண்டியது அவசியம்,'' என்றார்.

 எனவே "அசம்பாவிதங்கள் ஏற்பட்ட பின்பு, அதற்கான பணிகளை முடுக்கி விடுவதை தவிர்த்து, பள்ளி வாகனங்களில் உடனடியாக உதவியாளர் நியமனம் செய்ய கல்வி துறையும் உத்தரவிட வேண்டும்,' என்பதே பெரும்பாலான பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.~

No comments:

Post a Comment

கோரிக்கை

அனுப்புநர்: சு. சிவசுப்பிரமணியம், பொதுச்செயலாளர், கூடலூர் நுகர்வோர் மனிதவள மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பந்தலூர், நீலகிரி மாவட்டம...