அனுப்புநர்:
சு. சிவசுப்பிரமணியம்,
பொதுச்செயலாளர்,
கூடலூர் நுகர்வோர் மனிதவள மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்,
பந்தலூர், நீலகிரி மாவட்டம்.
பெறுநர்:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
சென்னை – 600009.
மூலம்:
மாண்புமிகு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் அவர்கள்.
பொருள்:
நியாய விலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை முன்கூட்டியே எடைபோடப்பட்டு சீல் செய்யப்பட்ட பாக்கெட்டுகளாக வழங்கும் திட்டத்தை தமிழகம் முழுவதும் விரைவாக நடைமுறைப்படுத்தக் கோரி மனு.
மதிப்பிற்குரிய ஐயா,
தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டம் மூலம் கோடிக்கணக்கான குடும்பங்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெற்று பயன்பெற்று வருகின்றனர். இருப்பினும் தற்போது பல நியாய விலைக் கடைகளில் பொருட்கள் திறந்த மூட்டைகளில் இருந்து அளந்து வழங்கப்படுவதால் எடை குறைவு, தரக் குறைபாடு, கலப்படம், கடத்தல் மற்றும் கறுப்புச் சந்தை விற்பனை போன்ற பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
இந்நிலையில், ரேஷன் பொருட்களை அரசு கிடங்குகளிலேயே துல்லியமாக எடைபோட்டு, அரசு முத்திரையுடன் சீல் செய்யப்பட்ட பாக்கெட்டுகளாக வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தத் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால்:
எடை குறைவு தொடர்பான புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
தரமற்ற பொருட்கள் கலப்பது தடுக்கப்படும்.
உணவுப் பொருட்களின் சுகாதாரமும் தரமும் மேம்படும்.
கடத்தல் மற்றும் கறுப்புச் சந்தை விற்பனையை கட்டுப்படுத்த முடியும்.
நுகர்வோரின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.
ரேஷன் கடைகளில் காத்திருக்கும் நேரம் குறைந்து சேவை மேம்படும்.
எனவே, தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை சோதனை அடிப்படையில் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் விரைவாக அமல்படுத்திடவும், பாக்கெட்டுகளில் எடை, தயாரிப்பு விவரம், பேட்ச் எண் மற்றும் புகார் தொடர்பு எண் ஆகியவற்றை கட்டாயமாக அச்சிடிடவும் நடவடிக்கை எடுக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நுகர்வோர் நலனை கருத்தில் கொண்டு எங்களது கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.
நன்றி.
இடம்: பந்தலூர்
தேதி: __________
தங்கள் உண்மையுள்ள,
(கையொப்பம்)
சு. சிவசுப்பிரமணியம்
பொதுச்செயலாளர்,
கூடலூர் நுகர்வோர் மனிதவள மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்,
பந்தலூர், நீலகிரி மாவட்டம்.
நகல் :
மாவட்ட ஆட்சியர்,
மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும்
ஆணையாளர் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
No comments:
Post a Comment