கர்ம வீரர் 6



முதல்வரின் அதிரடியால் கண்கலங்கிய செகரட்டரி...

அப்படி என்ன செய்தார்?

முதல்வரால் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பங்கள்...!!

👉முதல்வராக கர்மவீரர் காமராஜர் பதவியேற்ற முதல் ஆண்டு. அப்போது இருபது எம்பிபிஎஸ் இடங்கள் முதல்வர் கோட்டாவில் வழங்கப்படும்.

இதற்காக தேர்வு செய்யப்பட்ட நூறு விண்ணப்பங்களை முதல்வர் மேஜையில் வைத்தார் சீப் செகரட்டரி. அப்போது காமராஜர் கேட்டார் இது என்ன கோப்புகள் என்று?

👉அதற்கு சீப் செகரட்டரி, ஐயா! ஒவ்வொரு ஆண்டிலும் அரசாங்க மருத்துவ கல்லூரிகளில் இருபது எம்பிபிஎஸ் இடங்கள் முதல்வர் கோட்டாவில் வழங்கப்படும்.

 அதற்காக மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்பட்ட நூறு விண்ணப்பங்கள் இங்கே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் இருபது விண்ணப்பங்களை நீங்கள் பொறுமையாக தேர்வு செய்து தாருங்கள். இன்னும் இதற்கு கால அவகாசம் உள்ளது என்று கூறினார் சீப் செகரட்டரி.

👉அதற்கு காமராஜர் அவ்வளவு நேரம் எதற்கு? உடனே தருகிறேன் என்று விண்ணப்பங்களை பார்த்து இருபதை தேர்வு செய்து சீப் செகரட்டரியின் கையில் கொடுத்தும் விடுகிறார்.

சீப் செகரட்டரிக்கு ஒரே ஆச்சரியம். முதல்வரை பார்த்து, எதை வைத்து உடனே விண்ணப்பங்களை தேர்வு செய்தீர்கள் என்று கேட்கிறார்.

👉அதற்கு காமராஜர், 'பெற்றோர் கையொப்பம்" என்ற இடத்தில் யாரெல்லாம் 'கைரேகை" வைத்திருக்கிறார்களோ அவற்றைத்தான் தேர்ந்தெடுத்தேன்.

மேலும் முதல் தலைமுறையில் படிக்காதவர்களின் வீட்டு பிள்ளைகள் அடுத்த தலைமுறையிலாவது படித்து முன்னேறட்டுமே என்று காமராஜர் சொன்னவுடன் கண்கலங்கி நின்றாராம் சீப் செகரட்டரி.

👉காமராஜர் 'படித்துவிட்டு வேலை கிடைக்காமல், ஆயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம், ஓராசிரியர் பள்ளிகளுக்கு (ஒரே ஒரு ஆசிரியர் வைத்து இயங்கும் பள்ளி) ஆசிரியர்களாக நியமித்துவிட்டால் என்ன?

 'அ" - 'ஆ", 'அம்மா, அப்பா, படம், பட்டம், மரம், மாடு"-ன்னு கற்றுத் தரப் பயிற்சி ஆசிரியர்தான் தேவையா?" என்று வினவினார்.

அன்றைய பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த திரு.நெ.து.சுந்தர வடிவேலு இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.

👉எங்கும் ஓராசிரியர்கள் பள்ளிகளுக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். பின்னர் அவர்களுக்கு இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் அரசாங்கத்தின் செலவிலேயே ஆசிரியர் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த திட்டத்தினால், எத்தனையோ படித்த வேலையற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்தன.

👉இதன்பிறகு எல்லா கிராமங்களிலும் இரவுப் பாடச்சாலைகள் தொடங்கப்பட்டன. முதியோர்கள் கல்வி கற்கலானார்கள். எழுத்துக்கள், எண்கள் எழுத படிக்க கற்றுக்கொண்டார்கள். காமராஜர் ஆட்சியில் கல்வி நிலை உயர்வடைந்தது.

காமராஜர் கல்வித்துறை மட்டுமல்லாது மற்ற துறைகளில் செய்த திட்டங்களை பற்றி  தொடர்ந்து பார்க்கலாம்.


கர்ம வீரர் 5



மாஸ் காட்டிய முதல்வர்...

அடுத்தடுத்து அதிரடி திட்டங்கள்... மறக்க முடியுமா?

முதல்வராக காமராஜர் ஆற்றிய பணிகள்...!!

👉காமராஜர், தன்னுடைய அமைச்சரவையை மிகவும் வித்தியாசமாகவும், வியக்கும்படியும் அமைத்தார்.

👉காமராஜர் முதலமைச்சரான உடனேயே அதே பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், எம்.பக்தவத்ஜலம் ஆகிய இருவரையும் தன் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

👉அவர் தனது அமைச்சர்களுக்கு சொன்ன அறிவுரை என்ன தெரியுமா? 'பிரச்சனையை எதிர்கொள்ளுங்கள். அவை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை.

அதனை தீர்ப்பதற்கான வழிகளை தேடுங்கள். நீங்கள் ஏதாவது செய்தால் மக்கள் நிச்சயம் திருப்தி அடைவார்கள்" என்பதுதான்.

👉பின்னர், தன்னுடைய முதல் பணியாக ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தினை கைவிட்டு, அவரால் மூடப்பட்ட 6000 பள்ளிகளை திறந்தார்.

👉காமராஜரின் நல்லாட்சியில் கல்வித்துறையிலும், தொழில்துறையிலும் தமிழ்நாடு துரிதமான வளர்ச்சியை கண்டது. மாநிலம் முழுவதும் பல புதிய பள்ளிகளை கட்ட உத்தரவிட்டார்.

பழைய பள்ளிகள் சீர் செய்யப்பட்டு ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தொடக்கப்பள்ளி, ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் ஒரு உயர்நிலைப்பள்ளி இருப்பதை உறுதி செய்தார்.

👉எழுத்தறிவின்மையை போக்க வேண்டும் என்பதற்காக பதினோராம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தினார்.

👉ஜாதி வகுப்பு, ஏழை பணக்காரன் என்ற பேதத்தை ஒழிக்க விரும்பிய அவர் எல்லாப் பள்ளி மாணவர்களுக்கும் இலவச சீருடையை வழங்கினார்.

காமராஜரின் ஆட்சியில் தமிழ்மொழிக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது.

👉பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் தமிழை முக்கிய மொழியாக்கியதோடு அறிவியல் தொழில்நுட்ப பாடப் புத்தகங்களும் தமிழில் வெளிவர செய்தார்.

அரசாங்க அலுவலகங்களுக்கு தமிழ் தட்டச்சு இயந்திரங்களை அறிமுகம் செய்தார். நீதிமன்றங்களிலும் வழக்குகளை தமிழில் நடத்த ஊக்குவிக்கப்பட்டதும் இவரது ஆட்சி காலத்தில்தான்.

👉மேலும், 17,000த்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை திறந்ததோடு மட்டுமல்லாமல், பள்ளிக்குழந்தைகளுக்கு

'இலவச மதிய உணவு திட்டத்தினை" ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார்.


👉இந்திய அரசியலில் தலைச்சிறந்த பணியாக கருதப்பட்ட இந்த திட்டம், உலகளவில் பாராட்டப்படும் திட்டமாகவும் அமைந்தது எனலாம்.

இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்விக் கற்போரின் எண்ணிக்கை, இவருடைய ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது.

பள்ளிகளில் வேலைநாட்கள் 180ல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது.

கர்ம வீரர் 4



ஆட்சி புரிந்தது 9 ஆண்டுகள்... ஆனால் இன்றும் பலரது மனதில் நீங்காமல்...

முதல்வராக பதவியேற்ற காமராஜர்...!!

👉காமராஜர், மிகச்சிறந்த பேச்சாளர் என புகழப்பட்ட சத்தியமூர்த்தி அவர்களை தன்னுடைய அரசியல் குருவாக மதித்தார்.

👉1936ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றபோது, காமராஜரை செயலாளராக நியமித்தார்.

இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே, சத்தியமூர்த்தி இறந்துவிட்டார்.

ஆனால், காமராஜர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதலில் சத்தியமூர்த்தி வீட்டிற்கு சென்று தேசியக்கொடியை ஏற்றினார்.

சத்தியமூர்த்தி அவர்களுடன் காமராஜர்
தமிழக முதல்வராக காமராஜர் :

👉1953ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், ராஜாஜியின் செல்வாக்கு குறைந்ததோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சி உள்ளேயும் மதிப்பு குறைந்தது.

👉இதனால், ராஜாஜி பதவியிலிருந்து விலகி, தன் இடத்திற்கு சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார்.

ஆனால், கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், காமராஜர் பெருவாரியான வாக்குகளை பெற்றதால், 1954ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.

👉காமராஜர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன், சத்தியமூர்த்தியின் வீட்டுக்கு சென்று அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து வணங்கி, தன்னுடைய பணியை தொடர்ந்தார்.

👉இந்தியாவில் ஆங்கிலம் தெரியாத ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரானது அதுவே முதன்முறை.

ஆனால் ஆங்கிலம் தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற கல்வியுடனும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற அவர்தான் அடுத்த 9 ஆண்டுகளுக்கு தலைச்சிறந்த தலைமைத்துவத்தை தமிழகத்திற்கு வழங்கினார்.

அவரது காலக்கட்டத்தில் இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட மாநிலம் என்ற பெருமையை பெற்றது தமிழ்நாடு.

கர்ம வீரர் 3



தன்னலமில்லா தலைவன்..
இன்றும் மனதைவிட்டு நீங்காத சரித்திர மனிதர்..!!

விடுதலை போராட்டத்தில் காமராஜரின் பங்கு..!!

👉பள்ளிப்படிப்பை தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராஜர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது இந்தியா முழுவதும் சுதந்திரத் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அவருக்கு 15 வயதானபோது ஜாலியன் வாலாபாக் படுகொலைப் பற்றிய செய்தி அவரின் காதுக்கு எட்டியது.

👉டாக்டர் வரதராஜுலு நாயுடு, கல்யாணசுந்தர முதலியார் மற்றும் ஜார்ஜ் ஜோசப் போன்ற தேசத்தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்ட காமராஜர் சுதந்திரப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 'ஹோம் ரூல் இயக்கத்தின்" ஒரு அங்கமாக மாறிய அவர், பல போராட்டங்களிலும் கலந்துகொண்டார்.

👉அதேசமயம் காந்தி விடுத்த ஒத்துழையாமை இயக்க அழைப்பை ஏற்று 1920ஆம் ஆண்டில் தனது 16வது வயதில் காங்கிரஸ் கட்சியில் முழுநேர உறுப்பினராக சேர்ந்தார். அன்றிலிருந்து பல ஆண்டுகள் சௌகர்யம், பதவி, வசதி என்று பாராமல் கட்சிக்காக கடுமையாக உழைத்தார்.

👉1930ஆம் ஆண்டில் வேதாரண்யத்தில் நடந்த காந்தியடிகளின் உப்பு சத்தியாக்கிரகதில் கலந்துக்கொண்டார். அதனால் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டே, 'காந்தி இர்வின் ஒப்பந்தத்தின்" அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.

👉பின் விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதானார். அப்போது சேலம் டாக்டர் பெ.வரதராஜூலு நாயுடுவின் வழக்காடும் திறமையால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை ஆனார். 1940 இல் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

👉அங்கிருக்கும் போதே விருதுநகர் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்கு பின் விடுதலை ஆனதும் நேராக சென்று தன் பதவியை விலகினார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது.

👉மீண்டும் 1942ல் ஆகஸ்ட் புரட்சி நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை பெற்றார்.

👉மேலும், காமராஜர் அவர்கள் 'ஒத்துழையாமை இயக்கம்", 'வைக்கம் சத்தியாக்கிரகம்", 'நாக்பூர் கொடி சத்தியாக்கிரகம்" போன்றவற்றில் பங்கேற்றார். சென்னையில், 'வாள் சத்தியாக்கிரகத்தை" தொடங்கி, நீல் சிலை சத்தியாக்கிரகத்திற்கு தலைமை தாங்கினார்.

👉மேலும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த பல போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார்.



கர்ம வீரர் 2



விட்டுக்கொடுக்கும் மனம்... பொறுமை... பகுத்தறிவு... 
இது சரித்திர நாயகன்...!!

காமராஜரின் இளமைப் பருவம்!!

👉கு.காமராஜர் அவர்கள், 1903ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதி விருதுநகரில் குமாரசாமி-சிவகாமியம்மாவின் மகனாக பிறந்தார். 

👉'காமாட்சி" எனும் குலதெய்வத்தின் பெயரே ஆரம்பத்தில் இவருக்கு சூட்டப்பட்டது. அவரின் தாய் செல்லமாக 'ராசா" என அழைப்பதுண்டு. பிற்காலத்தில் இவ்விரு பெயர்களும் சேர்ந்தே 'காமராசர்" என்று வரலாற்றில் நீங்காத இடம்பிடித்த பெயராக மாறியது.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :

👉காமராஜர் அவர்கள், ஆரம்பக்கல்வியை தனது ஊரிலேயே தொடங்கி, 1908ஆம் ஆண்டில் 'ஏனாதி நாராயண வித்யா சாலையில்" சேர்க்கப்பட்டார். 

பின்னர் அடுத்த வருடமே விருதுப்பட்டியிலுள்ள உயர்நிலைப்பள்ளியான 'சத்ரிய வித்யா சாலா பள்ளியில்" சேர்ந்தார்.

👉அவருக்கு ஆறு வயதிருக்கும்போது, அவருடைய தந்தை இறந்ததால், அவரின் தாயாரின் நகைகளை விற்றுக் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

மேலும், தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட காமராஜர், தன்னுடைய மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.

👉படிக்கும்போதே மிகவும் பொறுமையுடனும், விட்டுக்கொடுக்கும் மனதுடனும் விளங்கினார். 

👉காமராஜர் பயின்ற பள்ளியில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு பிரசாதம் வழங்கப்படுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். 

பிரசாதம் விநியோகிக்கப்படும்போது மாணவர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்று, ஒரு தடவைக்கு இரண்டு தடவையாகப் பிரசாதத்தை கைநிறைய பெற்றுக்கொண்டனர். 

பிரசாதத்துக்காக அந்த மாதிரி முண்டியடித்துக்கொண்டு செல்வது காமராஜருக்கு பிடிக்கவில்லை. ஆகவே, ஒரு மூலையில் ஒதுங்கி நின்றார்.

👉கடைசியாக மிச்சமிருந்த பிரசாதத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றார்.

 'எல்லோரும் நிறைய பிரசாதம் வாங்கிக்கொண்டு செல்லும்போது, நீ மட்டும் குறைவாக வாங்கி வந்தது ஏன்?" என வீட்டில் உள்ளவர்கள் அவரைக் கேட்டனர். 

அதற்கு காமராஜர் 'மற்ற மாணவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு சென்று பிரசாதம் வாங்க எனக்கு விருப்பமில்லை. 

பள்ளியில் எல்லா மாணவர்களிடமும் ஐந்து காசு வசூலித்தவர்கள், ஒரே மாதிரியாகப் பிரசாதம் வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது அவர்கள் தவறு" என்று கூறினார். சிறுவயது முதலே பகுத்தறியும் ஆற்றலையும் பெற்றிருந்தார் காமராஜர்.



கர்ம வீரர். 1

 
எளிமையின் சிகரம்... 
அனைவரும் விரும்பும் ஓர் மாமனிதர்...!!

இந்தியாவின் கிங்மேக்கர்...!!

🌟மண்ணில் பிறக்கும் ஒவ்வொருவரும் தங்களின் பிறப்பிற்கான அர்த்தத்தை நிலைநாட்டிவிட்டு செல்லவேண்டும் என்பார்கள். அந்த வகையில் தனது பிறப்பையும், செயலையும் அர்த்தமுள்ளதாக மாற்றியவர்தான் இவர்.

🌟இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் இந்திய அரசியல் தலைவர்கள் என பலர் இருந்தாலும் அவர்களில் ஒருசிலரே நம் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளனர்.

🌟அவர்களின் தனிச்சிறப்புகள் இன்று வரையிலும் எவராலும் தொட்டுவிட முடியாத அளவில் இருக்கின்றன. அப்படிப்பட்ட அரசியல் தலைவர்களுள் ஒருவரைப்பற்றிதான் நாம் இங்கு காண இருக்கிறோம்...

🌟தமிழகத்தில் உணவின்மையால் மாணவர்களின் கல்வி கெட்டுப்போகக்கூடாது என்பதற்காக பள்ளிக் குழந்தைகளுக்காக முதன்முதலில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.

🌟இவரது ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலமாக விளங்கியது.

🌟இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கி, இந்தியாவின் 'கிங்மேக்கராக" விளங்கியவர் இவர்.

🌟எளிமைக்கும், நேர்மைக்கும் பெயர் பெற்றவர் இவர்.

🌟என்றைக்கும் நான் ஏழைப்பங்காளன்தான் என்பதை வாழ்நாளில் நிரூபித்துவிட்டு சென்ற உத்தமர் இவர்.

🌟இன்றைக்கு தமிழகம் கண்டுள்ள பல வளர்ச்சிகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டவர் இந்த கருப்புத் தங்கம்தான்.

🌟தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர்,

பெருந்தலைவர்

தென்னாட்டு காந்தி

படிக்காத மேதை

கர்மவீரர்

கல்விக்கண் திறந்தவர்

கருப்பு காந்தி
என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். 

சாதிக்க நினைக்கும் இளைஞர்களின் மனதில் முன்மாதிரியாக திகழ்பவர்

பெருந்தலைவர் காமராஜர்..!!
கல்விகண் திறந்த படிக்காத மேதை கர்மவீரர் காமராஜரின் சகாப்தியத்தை தொடர்ந்து  பார்க்கலாம்.


கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் 
நீலகிரி மாவட்டம்.
http://cchepnlg.blogspot.com/?m=1
 
 

போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...