தகவல் உரிமை சட்டம் முக்கிய பிரிவுகள்

 #RTI : தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் உள்ள முக்கிய பிரிவுகள் :

--------------------------------------------------------------------

(1)- உறுதிச்சான்று அளிக்கப்பட்ட நகல் பெறலாம் (பிரிவு - 2J(ii)                       

(2)- பிரிவு 4(1) D, ன்படி, தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காரணங்கள் தெரிவிக்க வேண்டும்.              

(3)- பிரிவு 6(2)ன்படி தகவல் கேட்கும் விண்ணப்பதாரரிடம் மனு எதற்கு? என்கிற காரணங்கள் கேட்க கூடாது.                      

 (4)- பிரிவு 6(3)ன்படி கேட்கப்பட்ட தகவல் வேறு அலுவலகத்தில் இருக்கின்ற போது உரிய அலுவலகத்துக்கு அனுப்பி 5 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு உரிய விபரத்தை தெரிவிக்க வேண்டும்.     

(5)- பிரிவு 7(1)ன்படி 30 நாட்களுக்குள் தகவலை அளித்தல் வேண்டும்.                      

(6)- பிரிவு 7(1)ன்படி உயிர் சம்மந்தப்பட்ட தகவல்கள் ஆனால் 48 மணிநேரத்திற்குள் அளித்தல் வேண்டும்.                                        

(7)- கேட்கப்பட்ட தகவல்கள் 30 நாட்களுக்குள் வந்து சேரவில்லை என்றால், உங்கள் தகவல் மறுக்கப்படுவதாக அர்த்தம். பிரிவு 7(8)ன்படி மறுப்பதற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.                                      

(8)- பிரிவு 7(6)ன்படி 30 நாட்களுக்குள் தகவல் தரவில்லை என்றால் கட்டணமின்றி தகவல் தெரிவிக்க வேண்டும்.                                     

(9)- பிரிவு 7(9)ன்படி நீங்கள் கேட்டுள்ளபடி தகவலும் அதுபோல அளிக்கப்பட வேண்டும். 

உதாரணமாக சிடியில் அல்லது நகல் என எப்படி கேட்டாலும் தகவல் அளிக்கப்பட வேண்டும். (ரெக்கார்டுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் என பொது தகவல் அலுவலர் கருதினால் உரிய காரணத்தை சொல்லி தர "இவ்வாறு இயலாது.... இவ்வாறு தரலாம்" என கூற வேண்டும்.                     

 (10)- பிரிவு 8(1)ன்படி நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் மறுக்க முடியாத தகவல்களை அளிக்க வேண்டும்.           

(11)- பிரிவு 19(8) B ன்படி தகவல் முழுமையாக வழங்கப்படாததால் இழப்பீட்டை கோரலாம். இந்த இழப்பீடு கொடுக்க தகவல் ஆணையத்திற்கு உரிமை உள்ளது.      

(12)- பிரிவு 20(2)ன்படி பொது தகவல் அதிகாரி விண்ணப்பங்கள் பெற மறுத்தாலோ அல்லது தகவல் அளிக்க மறுத்தாலோ தகவல் ஆணையம் பொது தகவல் அதிகாரிகள் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய முடியும்.                                                   

 (13)- பிரிவு 20(1)ன்படி தகவல் வழங்காத ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 250 முதல் ரூபாய் 25000 வரை தகவல் ஆணையம் பொது தகவல் அலுவலருக்கு அபராதம் விதிக்க முடியும்.                                         

(14)- பிரிவு 3 ன்படி அனைத்து குடிமக்களும் தகவல்களை கேட்கலாம்  அமைப்புகளின் சார்பிலும் கேட்க முடியும்.                                

(15)- பிரிவு 19(1)ன்படி பொது தகவல் அலுவலருக்கு அனுப்பிய மனுவுக்கு 30 நாட்களுக்குள் பதில் வராமல் இருந்தாலோ அல்லது 30 நாட்களுக்குள் பதில் வந்தும் மேல்முறையீடு செய்ய உரிய காரணத்திற்காக நிறுத்தி வைத்திருந்தாலோ பிரிவு 19(5)ன்படி மேல்முறையீடு காலதாமதமாக செய்தாலும் ஏற்க வேண்டும்.

(16)- பிரிவு 19(3)ன்படி மேல்முறையீடு அதிகாரியிடமிருந்து திருப்தியற்ற பதில் வந்தாலோ அல்லது பதில் வராமல் போனாலோ 90 நாட்களுக்குள் தகவல் ஆணையத்திற்கு இரண்டாவது மேல்முறையீடு செய்ய வேண்டும்.              

(17)- பிரிவு 5 ன்படி பொது தகவல் அலுவலரின் பதவி பெயரை கேட்கலாம்.   

 (18)- பிரிவு 27 ன்படி விதிகளை இயற்றிட உரிய அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது. 

(19)- பிரிவு 21 ன்படி நல்ல எண்ணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாதுகாப்பு அளிக்கிறது.                                                

(20)- பிரிவு 13 ன்படி பதவி, பணிக்காலம் மற்றும் பணியின் வரையறைகளை குறிக்கிறது.

தேசிய மகளிர் ஆணையம்

 

தேசிய மகளிர் ஆணையம்

பெண்களின் நலன் மற்றும் மேம்பாடு

பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக தேசிய மகளிர் ஆணையம் ஆண்டு முழுவதும் ஓய்வின்றி உழைத்து வருகிறது. தேசிய மகளிர் ஆணையம் 1992-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி அமைக்கப்பட்டது. இந்தியாவிலுள்ள பெண்களின் நலனைப் பாதுகாப்பதற்காக 1990-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தேசிய மகளிர் ஆணையச் சட்டத்தின் கீழ் சட்டபூர்வ அமைப்பாக இந்த ஆணையம் ஏற்படுத்தப்பட்டது.

தேசிய மகளிர் ஆணையத்தின் பணி மிகவும் விரிவானது. பெண்களின் நலன் மற்றும் மேம்பாடு சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களிலும் இந்த ஆணையம் முக்கியப் பங்காற்றுகிறது. அரசியல் சாசனப் படியும், சட்டப்படியும் பெண்களுக்கு வழங்கப் பட்டுள்ள பாதுகாப்புகள் சம்பந்தப்பட்ட அனைத்து விசயங்கள் குறித்து ஆய்வு செய்தல், கண்காணித்தல் போன்வற்றில் தேசிய மகளிர் ஆணையம் முக்கியப் பங்காற்றுகிறது. பெண்களின் நலன் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் அனைத்தையும் ஆய்வு செய்யும் இந்த ஆணையம், அந்தச் சட்டங்களில் எங்கெல்லாம் குறைகளும், பலவீனங்களும் இருக்கின்றனவோ அவற்றை ஆய்வுசெய்து தேவையான திருத்தங்களைச் செய்ய பரிந்துரைக்கிறது. இவை தவிர எத்தகைய புதியச் சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளையும் தேசிய மகளிர் ஆணையம் வழங்குகிறது. பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவது சம்பந்தப்பட்ட புகார்களைப் பெற்று அவற்றின் அடிப்படையிலும், குற்றச் செயல்களை அறிந்து தாமாகவும் நோட்டீஸ் அனுப்பி இந்த ஆணையம் நடவடிக்கை எடுக்கிறது. உரிமைகள் பறிக்கப்படும்போது அவர் களுக்குத் தேவையான உதவி, ஆதரவு, சட்ட கவனிப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பதற்காகவே தேசிய மகளிர் ஆணையம் இவ்வாறு செய்கிறது. வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெண்கள் சமத்துவம் பெறுவதற்கு வசதியாக, அவர்களின் நலனைப் பாதுகாக்க கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்கள் அனைத்தும் முறையாகச் செயல்படுத்தப்படுகின்றனவா? என்பதையும் இந்த ஆணையம் கண்காணிக்கிறது. பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சாசன மற்றும் சட்டப் பாதுகாப்புகளை ஆய்வு செய்வது, சட்டத் தீர்வுகளைப் பரிந்துரைப்பது, குறைகளைத் தீர்க்க உதவி செய்வது, பெண்கள் சம்பந்தப்பட்ட அனைத்து கொள்கை விசயங்களிலும் அரசுக்கு அறிவுரை வழங்குதல் ஆகியவைதான் தேசிய மகளிர் ஆணையத்தின் முதன்மைப் பணிகள் ஆகும்.

அமைப்பும் செயல்பாடுகளும்

தேசிய மகளிர் ஆணையச் சட்டத்தின்படி ஆணையத்தில் ஒரு தலைவரும், ஒரு உறுப்பினர் செயலரும், 5 அலுவலர் சாராத உறுப்பினர்களும் இருப்பார்கள். இந்த ஆணையத்தின் செயல்பாடுகள் மொத்தம் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. புகார்கள் மற்றும் விசாரணைப் பிரிவு, சட்டப்பிரிவு, வெளிநாடுவாழ் இந்தியர்கள் பிரிவு, ஆய்வுப் பிரிவு ஆகியவைதான் அந்த 4 பிரிவுகள் ஆகும். ஆணையத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் கிட்டத்தட்ட இந்த 4 பிரிவுகளால் தான் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

புகார்கள் மற்றும் விசாரணைப் பிரிவுதான் மகளிர் ஆணையத்தின் முதன்மைப் பிரிவு ஆகும். வாய்வழிப் புகார்கள், எழுத்து மூலமான புகார்கள், செய்தித்தாள்களில் வந்த செய்திகள் ஆகியவற்றை இந்த ஆணையம் ஆய்வும் செய்யும். 1990- ஆம் ஆண்டின் தேசிய மகளிர் ஆணையச் சட்டத்தின் 10(1)(7)(94) ஆகிய பிரிவுகளின்படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மகளிர் ஆணையம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும். கடுமையான குற்றங்கள் என்றால் அதுபற்றி விசாரிக்க விசாரணை ஆணையத்தை மகளிர் ஆணையம் அமைக்கும். இந்த ஆணையம் குற்றம் நடந்த இடத்திற்கே சென்று விசாரணை நடத்தும். இதில் சம்பந்தப்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தி சாட்சியங்களைச் சேகரித்து, அவற்றின் அடிப்படையில் பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை தேசிய மகளிர் ஆணையத்திடம் விசாரணை ஆணையம் தாக்கல் செய்யும். வன்முறைகள் மற்றும் ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணமும், நீதியும் கிடைக்க இந்த விசாரணைகள் உதவும். விசாரணை ஆணையங்களின் அறிக்கையை மாநில அரசுகள்/ அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள் செயல் படுத்தப்படுவதை மகளிர் ஆணையம் கண்காணிக்கும்.

தனக்கான கடமையைச் செய்யும் நோக்குடன், மகளிரின் அந்தஸ்தை மேம் படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவரும் ஆணையம், பெண்களின் சமூக, பொருளாதார அதிகாரமளித்தலுக்காகவும் பாடுபடுகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தேசிய மகளிர் ஆணையம், தொண்டு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களின் மகளிர் கல்வி மையங்கள் ஆகியவற்றின் சார்பில் நடத்தப்படும் சட்டங்கள்/ கருத்தரங்குகள்/ பயிலரங்குகள்/ பொது விசாரணைகளில் பங்கேற்பதற்காக மகளிர் ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விசாரிப்பார்கள். சிறைகளில் வாடும் பெண் கைதிகள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் ஆகியோரின் துன்பங்களை அறிவதற்காக முறையே சிறைகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் செல்லும் ஆணைய அதிகாரிகள், பெண்களின் குறைகளைக் களையும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பரிந்துரைப்பார்கள். பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை முதல் நோக்கில் அறிந்துகொள்வதற்காகவும், அதற்கான தீர்வுகளைத் தெரிவிப்பதற் காகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பிரச்சினைகளைக் கொண்டு சென்று தீர்ப்பதற்காகவும், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மகளிர் கல்வி மையங்களின் சார்பில் ஏற்பாடு செய்யப்படும். பெண்களின் சட்ட உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு முகாம்களில் இவர்கள் கலந்துகொள்கின்றனர்.

புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தல்

தேசிய மகளிர் ஆணையத்திற்கு ஏராளமான புகார்கள் வருகின்றன. விசாரணைக்குக் குழுக்களை அமைத்து விரைவான நீதி வழங்குவதற்காக பல வழக்குகளை ஆணையம் தாமாகவே முன்வந்து எடுத்துக்கொள்கிறது. சட்ட விழிப்புணர்வு திட்டங்கள், மகளிர் மக்கள் நீதிமன்றங்கள் போன்றவற்றை நடத்த இந்த ஆணையம் உதவிசெய்கிறது. அதுமட்டுமின்றி, கருத்தரங்குகள்/ பயிலரங்குகள்/ ஆலோசனைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்யும் ஆணையம், பெண் சிசுக் கொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்களையும் செய்து வருகிறது.

பணியிடங்களில் பெண்களுக்குப் பாலியல் தொல்லைகள் அளிக்கப்படுவது தொடர்பான புகார்கள் வந்தால், அதுபற்றி விசாரிப்பதற் காக, விஷகாய ராஜஸ்தான் அரசு (ஆஒத 1997 உச்சநீதிமன்றம் 3011) வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, உள்விசாரணைக் குழு ஒன்றை அமைக்கும்படி சம்பந்தப்பட்ட நிறுவனத்தைத் தேசிய மகளிர் ஆணையம் கேட்டுக்கொள்ளும். குடும்ப வன்முறை, வரதட்சணைக் கேட்டல், வரதட்சணைக் கொடுமை, கொலை, சித்ரவதை செய்தல், கடத்தல், வெளிநாடுவாழ் இந்தியர்கள்/ வெளிநாடுவாழ் இந்தியர்களின் திருமணம் தொடர்பான மோசடிகள், பெண்களை கைவிட்டுவிட்டுக் கணவர்கள் ஓடுதல், முதன் மனைவி இருக்கும்போதே இரண்டாவது மணம் செய்தல், கற்பழிப்பு, காவல்துறை அலட்சியம், தொல்லை தருதல், கணவனால் கொடுமைக்குள்ளாக்கப் படுதல், பெண்களின் உரிமைகளைப் பறித்தல், பாலின பாகுபாடு பாலினத் தொல்லை உள்ளிட்டவை தொடர்பான புகார்கள் தேசிய மகளிர் ஆணையத்தால் பெறப்படுகின்றன.

அண்மைக்கால முன்முயற்சிகள்

கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்குரிய பெண் களின் உரிமைகள் குறித்து அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அவர்களின் திறனை மேம்படுத்துவதற்கும், இது தொடர்பாக காவல்துறையினருக்குத் தெரிவிப்பதற்கும் ஏராளமான நடவடிக்கைகளைத் தேசிய மகளிர் ஆணையம் எடுத்திருக்கிறது. "வன்முறை இல்லாத இல்லம் பெண்ணின் உரிமை' "ஜாகோ' மற்றும் பிற அமைப்புகளுடன் செய்யப்பட்டு கூட்டுமுயற்சி ஒப்பந்தங்கள் இவற்றில் அடங்கும்.

"மகளிருக்கு அதிகாரமளித்தல் இயக்கம்' என்ற புதிய முயற்சி கடந்த 2011-ஆம் ஆண்டில் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டது.

பெண்களின் நலனுக்கான ஏராளமான புத்தகங்களையும் இந்த ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

பெண்களுக்கு அதிகாரமளித்தல் மட்டுமின்றி அவர்களின் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திலும் தேசிய மகளிர் ஆணையம் கவனம் செலுத்துகிறது. பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கட்டுப்படுத்துவதற்காக தேசிய மகளிர் ஆணையம், காவல்துறை, ஊடகங்கள் ஆகிய மூன்றுக்கும் இடையே கருத்துப் பறிமாற்றங்கள் தேவை. தேசிய மகளிர் ஆணையத்தின் சார்பில் 'Rashtra Mahila' என்ற பெயரில் மாதாந்திர செய்தி ஏடு ஒன்று வெளியிடப்படுகிறது.

திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகள்

தேசிய மகளிர் ஆணையத்தால் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள், மாநாடுகள் ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன. இவற்றில், குழந்தைப்பேறுக்கு வாய்ப்பில்லாத பெண்களுக்காக கருவை சுமக்க கருப்பையை வாடகைக் விடுதல் மற்றும் குழந்தைப் பெறு தொழில்நுட்பங்கள், ஊடகங்களில் பெண்களை அநாகரீகமாக பிரதிநிதித்துவபடுத்தல், கற்பழிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு அளித்தல், தொழிற்சாலைகளில் இரவு நேரங்களில் பெண்கள் வேலைசெய்தல், திருமணம் சம்பந்தப்பட்ட சட்டங்கள், பெண்களைச் சூனியக்காரிகள் என முத்திரை குத்தி கொடுமைப்படுத்துதல், பெண் களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், பெண்களுக்கு அதிகாரமளித்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஆய்வுசெய்வதை தடைசெய்யும் சட்டம், பாலியல் தொல்லைகளுக்கு எதிராக பெண்களுக்குப் பாதுகாப்பு அளித்தல், வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961, பெண்கள் பரிமாற்றம், இந்தியாவில் மனிதக் கடத்துதலை தடுத்தல் மற்றும் ஒடுக்குதல், முடிவெடுக்கும் நடைமுறை தொடர்பான அரசியலில் பெண்களின் பங்கேற்பு ஆகிய தலைப்புகள் அடங்கும்.

குடும்ப வன்முறை, கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை சோதனை மூலம் கண்டறிதல், குறைந்துவரும் பாலின விகிதம், தாய்மார்களுக்கான சுகாதார சேவைகள், வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் ஆயுதப் போராட்டங்களால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், பெண்களின் உரிமைகள், முஸ்லீம் பெண்கள், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் பெண்ணின் பங்கு, குழந்தை திருமணம் போன்றவை குறித்து பொது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரும், உறுப்பினர்களும் கோடா சிறை. திருவனந்தபுரம் சிறை, புதுச்சேரி சிறை, பெங்களூரூ மத்திய சிறை, நரிபந்தி நிகேதன் லக்னோ, பாண்டா மாவட்டச்சிறை, கோவா சிறை, அலிப்பூர் சீர்திருத்த இல்லம், ஏர்வாடி மகளிர் சிறை ஆகிய சிறைகளுக்கச் சென்று ஆய்வு செய்ததுடன், அவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்குப் பரிந்துரைகளையும் வழங்கியுள்ளனர்.

தேசிய உதவி தொலைபேசி சேவை

மகளிருக்கு உதவுவதற்காக 24 மணிநேரமும் இயங்கும் இலவச தொலைபேசி சேவையைக் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் 2012 ஏப்ரல் மாதத்தில் தேசிய மகளிர் ஆணையம் தொடங்கியது. இந்தத் தொலைபேசி சேவையை அகமதாபாத் பெண்கள் நடவடிக்கைக்குழு என்ற தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொலைபேசி சேவையை சோதனை அடிப்படையில் மகளிர் ஆணையம் தொடங்கியிருக்கிறது.

சாதனை மைல்கற்கள்

தேசிய மகளிர் ஆணையம் கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு சட்டங்களை மறுஆய்வு செய்துள்ளது. புதிய சட்டங்களை நிறைவேற்ற யோசனை கூறியுள்ளது.

கீழ்க்கண்ட சட்டங்களில் திருத்தங்களைச் செய்யும்படி தேசிய மகளிர் ஆணையம் யோசனை தெரிவித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்றன.

  • குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்- 2005 என்ற சட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துதல்.
  • பெண்களை அநாகரீகமாக பிரதிநிதித்துவப்படுத்துவதைத் தடுத்தல் சட்டம்- 1986.
  • பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகளைத் தடுத்தல் சட்டம் - 2010.
  • பாலியல் தாக்குதல் தடுத்தல் சட்டம்.
  • வீட்டு வேலையாட்கள் நலன் மற்றும் சமூகப் பாதுகாப்புச் சட்டம் - 2010.
  • விவாகரத்துக்குப் பிறகு ஜீவனாம்சம் வழங்குவது தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125-வது பிரிவில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
  • திருமணம் செய்வதற்கான வயது குறித்த சட்டம்
  • PWDVA சட்டம் மற்றும் குத்தகை உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் முன்வைக்கப் பட்டுள்ளன.
  • சூனியம் வைத்தல் தொடர்பான மத்திய சட்டத்தில் மறு ஆய்வு.
  • பெண்கள் உள்ளிட்ட மனிதக் கடத்தலை தடுப்பதற்காக ஐ.நா.வின் கட்டுப்பாட்டில் செயல்படும் (UNIFEM) என்ற அமைப்புடன் கடந்த 2010-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தேசிய மகளிர் ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது.

புதிய வரைவுச் சட்டங்கள்

  • கவுரவம், பாரம்பரியம் (கௌரவக்கொலை) என்ற பெயரில் நடக்கும் குற்றங்களைத் தடுத்தல் சட்டம் - 2010
  • ஆசிட் வீச்சில் (ஆசிட் வீச்சு) பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வழங்குதல் திட்டம்
  • கற்பழிப்புக் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு திட்டம்.
  • PWDVA சட்டத்தைச் சிறப்பாகச் செயல் படுத்துவதற்கு வசதியாக சுதந்திரமான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் துணை பணியாளர்களை நியமிக்க மாநில அரசுகளை ஊக்கவிக்கும் வகையில் அவற்றுக்கு நிதி உதவி அளிப்பதற்காக மத்திய அரசின் ஆதரவுடன் கூடிய திட்டம் ஒன்றை தேசிய மகளிர் ஆணையம் முன்வைத்திருக்கிறது.

தேசிய மகளிர் ஆணையம் தொடங்கப்பட்டதிலிருந்து இன்று வரையிலான 20 ஆண்டுகளில் பொருத்தமான கொள்கை நடவடிக்கைகள், சட்டங்கள் மற்றும் சட்டத்தைச் செயல்படுத்துதல் மூலமாக பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சமத்துவத் தையும், சம பங்கேற்பையும் பெறுவதற்காக ஆணையம் பாடுபட்டு வருகிறது.

மகளிருக்கு அதிகாரமளிப்பதன் மூலம் தங்களின் உரிமைகளுக்காக போராடுவதற்குரிய அறிவும், வலிமையும் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் ஒடுக்குமுறைகளும் குறையும் என்று நம்புகிறேன். பெண்களுக்குச் சட்ட, சமூக, அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரம் மற்றும் மேம்பாடு ஆகியஇலக்குகளை எட்டவும், அதன்மூலம் சமூகத்தில் பெண்களின் அந்தஸ்தை உயர்த்தவும் பாடுபட வேண்டும் என்ற அதன் பணியை நிறைவேற்ற தேசிய மகளிர் ஆணையம் உறுதிபூண்டிருக்கிறது. இந்த இலக்கை நோக்கிய பயணத்தில் சில முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ள போதிலும், இன்னும் செய்யப்பட வேண்டியவை ஏராளமாக உள்ளன.

ஆதாரம் : தேசிய மகளிர் ஆணையம்

தேசிய மகளிர் ஆணையம்

நகராட்சி உறுப்பினர்

 ஒரு சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்று நகராட்சி உறுப்பினர் ஆனால் என்ன பணிகளெல்லாம் அவரால் செய்யமுடியும்? 


நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள்: 

🎯 பொது சுகாதாரம் - துப்புரவு, கழிவுநீர் அகற்றல், கழிப்பறை வசதி, திடக்கழிவு மேலாண்மை 

🎯மக்கள் உடல்நலம் மற்றும் நோய்த்தடுப்பு 

🎯குடிநீர் வழங்கல் 

🎯தெரு விளக்கு வசதி மற்றும் கல்வி மேம்பாடு  

🎯கட்டிடங்கள் மற்றும் கட்டுவதை ஒழுங்குசெய்தல் 

🎯தொழிற்சாலைகள் மற்றும் தொழில்கள் ஏற்படுத்துவதை உரிமம் வழங்கி முறைப்படுத்துதல் 

🎯பிறப்பு/இறப்பு பதிவு 

🎯மயானங்களை ஏற்படுத்தி பராமரித்தல். 

🎯சாலை வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் பராமரித்தல் 

🎯பூங்காக்கள் மற்றும் கட்டிடங்கள் பராமரிப்பு 

🎯 மாநில, மத்திய அரசுகளின் திட்டங்களை செயல்படுத்துதல்

🎯இன்னும் பல..
இதற்கான வருவாய் ஆதாரங்கள்: 

🏷️சொத்து வரி
🏷️தொழில் வரி
🏷️கேளிக்கை வரி
🏷️விளம்பர வரி
🏷️பயனீட்டாளர் கட்டணம்
🏷️நிறுவனத்தின் மீதான வரி
🏷️நுழைவு வரி
🏷️வணிக வளாகங்கள் வாடகை
🏷️பூங்காங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களின் வருவாய்
🏷️அரசு மானியம்
🏷️மாநில நிதி பகிர்வு
🏷️ மத்திய அரசின் திட்டங்கள் மூலமான நிதி

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்தும், நகராட்சி மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லோருக்கும் பொருந்தும், அவர் ஆளும் கட்சியா  இல்லை எதிர் கட்சியா என்ற கேள்விக்கு இடம் இல்லை.! 

*உண்மையான மக்கள் நலம் விரும்பும் ஒர் வார்டு கவுன்சிலர், தனது வார்டுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த நகராட்சியின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் பணியாற்ற முடியும்!*

நகராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி நிர்வாகத்தோடு இணைந்து அதனது சுய விருப்பு வெறுப்புகளை களைந்து ஊரின் வளர்ச்சிக்கு கிராம வளர்ச்சிக்கும், வார்டு மக்களின் நலனுக்கும் துணை நிற்பதே உண்மையான மக்களின் சேவகர்.

ஆளும் கட்சி வேட்பாளரும், சுயட்சை வேட்பாளரும் வார்டு மக்களால்  நேரடியாக வாக்களித்து தான் தேர்வு செய்யப்படுகிறார். 

தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர், நகராட்சி தலைவரால் பதவிப்பிரமாணம் செய்யப்பட்டு பதவி ஏற்கிறார். அது முதல் அவர்களது பணி தொடங்குகிறது. வேறெந்த  வேற்றுமையும் அவர்களுக்கிடையே இல்லை! 

*⁉️உங்கள் தெருவில் நிற்கும் வேட்பாளர் களபணி செய்பவரா?*

*⁉️நீங்க நினைத்த நேரத்தில் அவரை அனுகமுடியுமா?*

*⁉️பெரியண்ணன் மனப்பான்மை இல்லாதா, சகோதர குணம் உடையவரா?*

*⁉️கறைபடியாத கரங்களுக்கு சொந்தகாரா?*

*⁉️உங்கள் பகுதி கோரிக்கைக்களை நகர மன்றத்தில் உரக்க சொல்லக் கூடிய தகுதி உடையவரா?*

என பார்த்து வாக்களிக்களித்தால் மட்டுமே நம் தேவைகள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நிறைவேறும்!

சிந்திப்போம்! வாக்களிப்போம்!👆


நுகர்வோர் பாதுகாப்பு மையம்
நீலகிரி மாவட்டம்

கிராம சபை :

 அடிப்படை சட்ட விழிப்புணர்வு.....


GRAMA SABAI. கிராம சபை :


1994ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 3ன்படி ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும், அக்கிராம ஊராட்சிப் பகுதியில் வாக்காளர்களாகப் பதிவு செய்த அனைத்து நபர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டு கிராம சபை செயல்படும். 


கிராம சபை, ஜனநாயக அமைப்பின் அடித்தளமாகும். பொது மக்கள் நேரடியாக ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்பதால் அடித்தள ஜனநாயகத்திற்கு வலுவூட்டப்படுகிறது. ஊரக உள்ளாட்சி அமைப்புகள் திட்டமிடுவதிலும், வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்துவதிலும், பொதுமக்களின் ஒட்டுமொத்தத் திறமை மற்றும் அனுபவம் உதவி செய்கிறது. 


கிராம ஊராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றத்தை கிராம சபைக் கூட்டத்தில் சமூகத் தணிக்கைக்கு உட்படுத்துவதன் மூலம் வெளிப்படையான நிர்வாகம் உறுதி செய்யப்படுகிறது.



•கிராம ஊராட்சிகள், ஒரு ஆண்டில் பின்வரும் நாட்களில், குறிப்பாக ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, மற்றும் அக்டோபர் 2 ஆகிய நாட்களில் கிராம சபைக் கூட்டத்தினை நடத்த வேண்டும்.


 தேவையின் அடிப்படையில், சிறப்பு கிராம சபைக் கூட்டங்களை ஊராட்சிகளின் ஆய்வாளர்(மாவட்ட ஆட்சித் தலைவர்) அனுமதி பெற்று நடத்தலாம்.


•தகுதி வாய்ந்த அனைத்து வாக்காளர்களும் கிராம சபையின் உறுப்பினர்களாவர்.


•விவாதிக்கப்பட வேண்டிய கூட்டப் பொருள்கள், கிராம ஊராட்சிகளால் முடிவு செய்யப்படும்.


•கிராம சபைக் கூட்டம் குறித்தான அறிவிப்பு குறைந்த பட்சம் ஒருவாரத்திற்கு முன்பாக வெளியிட வேண்டும்.


•கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்கு மக்கள் தொகை அடிப்படையில் கீழ்க்கண்டவாறு குறைவெண் வரம்பு இருக்க வேண்டும்.


ஊராட்சி மக்கள் தொகை 


கலந்துகொள்ள வேண்டிய

 குறைந்தபட்ச மக்கள் 


500 வரை


50


501 முதல் 3000 வரை


100


3001 முதல் 10000 வரை


200


10001க்கு மேல்


300


மேற்கண்ட குறைவெண் வரம்பில் மகளிர் 3ல் ஒரு பங்கு இருக்க வேண்டும். அந்த கிராம ஊராட்சியின் மொத்த மக்கள் தொகையில் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் விகிதாச்சாரம் எதுவோ, அதே விகிதாச்சாரத்தில் ஆதிதிராவிடர் / பழங்குடியினருக்கு குறைவெண் வரம்பு இருக்க வேண்டும்.


•கிராம ஊராட்சித் தலைவர், கிராம சபைக் கூட்டத்திற்குத் தலைமை வகிப்பார்.


கிராம சபையின் கடமைகள் :


•கிராம ஊராட்சியின் ஆண்டு வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தல்.


•தனி நபர் பயன்பெறும் திட்டங்களுக்கான பயனாளிகள் பட்டியலுக்கு அங்கீகாரம் அளித்தல் மற்றும் சமுதாய சொத்துக்களை ஏற்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு அங்கீகாரம் அளித்தல்.


•இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் போன்ற திட்டங்களின் முன்னேற்றம், செயல்பாடுகளை ஆய்வு செய்தல்.


•கிராம ஊராட்சிகளால் நிறைவேற்றப்படும் பணிகளின் தரத்தை சமூக மற்றும் தொழில் நுட்ப தணிக்கை மூலம் கண்காணித்தல் மற்றும் கணிப்பாய்வு செய்தல்.


•கிராம ஊராட்சிக்கான ஆண்டுத் தணிக்கை அறிக்கை மற்றும் கணக்குகளை பரிசீலித்தல்.


•சமுதாய ஒருங்கிணைப்பு மற்றும் மத நல்லிணக்கத்தை ஊக்குவித்தல்.


•கிராம சபை, கிராம ஊராட்சிகளின் நிர்வாகம், திட்டச் செயல்பாடுகள் மற்றும் வரவு செலவு அறிக்கைகளைத் தணிக்கை செய்திடும் சமூகத் தணிக்கை அமைப்பாகவும் செயல்படும்.


பொது மக்கள் பங்களிப்பு :


•கிராம ஊராட்சிப் பகுதியில் வசிக்கும் மக்கள்கிராம சபையில் கலந்து கொண்டு ஊராட்சி தொடர்பாக தங்களின் கருத்துகளை எடுத்துரைக்கலாம்.


•கிராம ஊராட்சியின் நடவடிக்கைகளை ஆய்வு செய்து அதற்கு ஒப்புதல் அளித்தல் அல்லது குறைகளைத் தெரிவிக்கலாம்.


•பயனாளிகள் தொடர்பான திட்டங்கள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களை மேற்கொள்ள உரிய அறிவுரைகளை வழங்கலாம்.


•கிராம ஊராட்சியின் வளர்ச்சித் திட்டங்கள் மீது தங்களின் கருத்துக்களைத் தெரிவிப்பதுடன் கிராம ஊராட்சியின் வளர்ச்சிக்காக தங்களது முழு ஒத்துழைப்பையும் அளிக்கலாம்.


தொகுப்பறிக்கை :


கிராம சபையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான அறிக்கையினை, தீர்மான நகலுடன் கிராம ஊராட்சித் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) மூலமாக மாவட்ட ஆட்சித் தலைவர் / ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு மூன்று நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.


ஊரகப் பகுதிகளில் வீடுகளுக்கான குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்குதல் :


1.கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்தல், கிராம ஊராட்சியின் முக்கியக் கடமைகளில் ஒன்றாகும்.


2.கிராமப் பகுதிகளில் கைப்பம்புகள், பொதுக் குடிநீர்க் குழாய்கள் மற்றும் வீட்டு இணைப்புகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.


3.கிராம ஊராட்சியில் உள்ள குடிநீர் ஆதாரங்களின் அடிப்படையில் வீடுகளுக்கான குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


4.கிராம ஊராட்சி, குடிநீர் ஆதாரம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் அறிக்கையின் அடிப்படையில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு கிராம ஊராட்சியின் ஒப்புதல் பெறவேண்டும்.


5.கிராமப் பகுதியில் வசிப்போர், வீடுகளுக்கான குடிநீர் குழாய் இணைப்பு தேவைப்படின் கிராம ஊராட்சியிடம் எழுத்து மூலம் விண்ணப்பத்திட வேண்டும்.


6.வீட்டுக்கான குடிநீர் குழாய் இணைப்பிற்காக குறைந்தபட்சம் ரூ.1,000/- முன் வைப்புத் தொகையினை வீட்டின் உரிமையாளர் கிராம ஊராட்சியிடம் செலுத்திடவேண்டும்.


7.அனுமதிக்கப்பட்ட பரிமாணத்தில், குடிநீர்க் குழாயினை வீட்டின் உரிமையாளரே, அவரது சொந்த செலவில்அமைத்துக் கொள்ள வேண்டும்.


8.ஒவ்வொரு வீட்டுக் குழாய் இணைப்பிற்கும் மாதாந்திர குடிநீர் கட்டணமாக ரூ.30/-க்குகுறையாமல் கிராம ஊராட்சிமன்ற தீர்மானத்தின்படி நிர்ணயிக்கப்பட்டு வீட்டின் உரிமையாளர் கிராம ஊராட்சிக்கு செலுத்திட வேண்டும்.


9.வறட்சிக் காலங்களில் குடிநீர் ஆதாரம் குறைவாக இருப்பதாக உணரப்படின், கிராம ஊராட்சி உரிய தீர்மானம் நிறைவேற்றி, வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அதிகாரம் உள்ளது.


10.வீடுகளுக்கான குடிநீர் குழாய் இணைப்பு அனுமதி கோரி விண்ணப்பித்ததன் பேரில் தகுந்த காரணமின்றி குடிநீர் குழாய் இணைப்பினை கிராம ஊராட்சி வழங்கவில்லையென்றாலோ, தாமதம் என அறியப்பட்டாலோ வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) அவர்களை அணுகி மேல்முறையீடு செய்யலாம்.


கிராம ஊராட்சிப் பகுதிகளில் கட்டட வரைபட அனுமதி வழங்குதல் :


•கிராம ஊராட்சியில் வசிக்கும் ஒருவர், புதிதாக கட்டடம் கட்டவோ, ஏற்கனவே உள்ள கட்டடத்தில் மாற்றம் செய்யவோ கருதினால் பணிகள் தொடங்கும் முன் கிராம ஊராட்சித் தலைவரிடம் உரிய படிவத்தில் முழு விவரங்கள் மற்றும் ஆவணங்களை அனுப்பிட வேண்டும்.


•கட்டடத்திற்கான வரைபடம், கட்டுமானம் அமையப்போகும் இடத்தின் தன்மை மற்றும் கட்ட உபயோகிக்கும் பொருட்களின் விவரங்களை மூன்று பிரதிகளில் அளிக்க வேண்டும்.


•கூடுதலாகக் கட்டவோ, மாற்றம் செய்யவோ வேண்டின் அதன் காரணத்தினை அளிக்க வேண்டும்.


•விண்ணப்பம், வரைபடம், இணைப்புகள் மற்றும் தேவையான இதர ஆவணங்கள் ஆகியவற்றில் விண்ணப்பதாரர் கையொப்பமிட்டிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் நில உரிமையாளராக இல்லையெனில், உரிமையாளரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெற்று இணைக்க வேண்டும்.


•வழிபாடு, மதசார்புள்ள கட்டடம் கட்ட வேண்டும் எனில், மாவட்ட ஆட்சித் தலைவரின் முன் அனுமதி பெற வேண்டும்.


•சுடுகாடு, இடுகாடு போன்றவற்றின் எல்லையிலிருந்து 90 மீட்டர் தூரத்திற்குள் குடியிருப்பு / கட்டடத்தினைக் கட்ட வேண்டுமெனில், அந்த சுடுகாடு/இடுகாடு ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில் அனுமதி வழங்கப்படும்.


•கட்டடங்களில் அணுகக் கூடிய இடங்களிலிருந்து குறைந்த அழுத்த மின்சக்தி கம்பிக்கும் 1.50மீ இடைவெளி பக்கவாட்டிலும், உயர் அழுத்த மின்சக்தி கம்பிகளுக்கு 1.75மீ இடைவெளி பக்கவாட்டிலும் இருக்க வேண்டும்.


•அணுக முடியாத இடங்களில் குறைந்தது 2.5மீ இடைவெளி மின்கம்பிகளிலிருந்து செங்குத்தாக இருக்க வேண்டும். அணுகக்கூடிய இடங்களில் குறைந்த 4.5மீ இடைவெளி மின்கம்பியிலிருந்து செங்குத்தாக இருக்க வேண்டும்.


•கட்டட விதிகளை மீறி கட்டப்பட்டிருப்பின் அனுமதியை ரத்து செய்யும் அதிகாரம் கிராம ஊராட்சிக்கு உண்டு.


•கிராம ஊராட்சிக்கு மனை ஒப்புதலுடன் கூடிய கட்டட அனுமதி வழங்கும் அதிகாரம் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது:


4 குடியிருப்புகளுக்குள் மற்றும் 4,000 சதுர அடிக்கு மிகாமல் கட்டப்படும் தரை மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட கட்டடங்களுக்கு அனுமதி வழங்குதல்.


2,000 சதுர அடிக்குள் கட்டப்படும் தரை தளம் மற்றும் முதல் தளம் கொண்ட வணிக கட்டடங்களுக்கு அனுமதி வழங்குதல்.


அனுமதியற்ற மனைப்பிரிவில் எவ்வித மனை ஒப்புதலோ, கட்டட அனுமதியோ கிராம ஊராட்சியால் அனுமதிக்கப்படமாட்டாது.


குடியிருப்புகளுக்கு 4,000 சதுர அடிகளுக்கு மேலும், வணிக கட்டடங்களுக்கு 2,000 சதுர அடிகளுக்கு மேலும் கட்டட அனுமதி கோரும் நிகழ்வுகளில் கிராம ஊராட்சியின் வழியாக நகர் ஊரமைப்புத் துறை மண்டல துணை இயக்குனரது ஒப்புதல் பெறப்படவேண்டும்.


ஊராட்சி ஒன்றியம் :


•ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியமும், 5,000 மக்கள் தொகை கொண்ட ஊராட்சி ஒன்றிய வார்டுகளை உள்ளடக்கிய வளர்ச்சி வட்டாரங்களாகும்.


•தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களால் மறைமுகத் தேர்தலில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் தேர்வு செய்யப்படுவார்.


•வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி), ஊராட்சி ஒன்றியக் குழுவின் ஆணையர் ஆவார்.


•ஊராட்சி ஒன்றியங்களுக்கு வரி விதிக்கும் அதிகாரம் ஏதும் இல்லை.


•மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஊராட்சி ஒன்றியங்கள் இடைநிலை அமைப்பாக செயல்படுகிறது.


ஊராட்சி ஒன்றியத்தின் கடமைகள்


தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 112-ன்படி ஊராட்சி ஒன்றியக் குழு கீழ்க்கண்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


•மத்திய மற்றும் மாநில அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துதல்.


•ஊராட்சி ஒன்றிய சாலைகள் என்று வகைப்படுத்தப்பட்ட சாலைகள், அச்சாலைகளில் உள்ள பாலங்கள், சிறுபாலங்கள், தரைப்பாலங்கள் ஆகியவற்றைக் கட்டுதல், பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல்.


•ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளை கட்டுதல் மற்றும் பராமரித்தல்.


•குடிநீர் மற்றும் குளிப்பதற்கான நீர் ஆதாரங்கள் அமைத்தல்.


•தொற்று நோய் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தல்.


•ஊராட்சி ஒன்றியத்தால் வரையறுக்கப்பட்ட கண்காட்சி மற்றும் விழாக்களை நடத்துதல்.


•ஊராட்சி ஒன்றிய சந்தைகளை ஏற்படுத்துதல் மற்றும் பராமரித்தல், கடைகள், விற்பனை மையங்கள், தரை மேடை கட்டுதல் மற்றும் பராமரித்தல்.


இதர கடமைகள் :


•இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிராம ஊராட்சிகளின் உபயோகத்திற்காக பொதுவான இடுகாடு, சுடுகாட்டை அமைத்துப் பராமரிக்கலாம்.


•இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் வாழும் மக்களின் தேவைக்காக குடிநீர் மற்றும் குளிப்பதற்கான நீர் ஆதாரங்களை அமைத்தல்.


•ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பொதுவான இடங்களில் கிராம ஊராட்சிகள் விளக்கு வசதி அமைக்கப்படவில்லையெனில், பொது மக்களின் நலம் மற்றும் பாதுகாப்பிற்காக விளக்கு வசதி அமைத்துத் தரலாம்.


•இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள் சேர்ந்து பொது மருந்தகங்கள் அமைத்துப் பராமரிக்கலாம்.


•ஊராட்சி ஒன்றியத்திற்குச் சொந்தமான அசையாச் சொத்துக்களை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள எந்த ஒரு கிராம ஊராட்சியிடமும் ஒப்படைக்க அறிவிக்கை செய்யலாம்.


அதிகாரங்கள் :


•ஊராட்சி ஒன்றியப் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் செலவினங்கள் அனைத்தும் ஊராட்சி ஒன்றிய குழுவின் ஒப்புதலுடனேயே செய்யப்பட வேண்டும்.


•ஊராட்சி ஒன்றிய வரவு செலவுத் திட்டத்திற்கு ஊராட்சி ஒன்றியத்தின் அனுமதி பெற்ற பின்னரே திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.


•ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நீர்ப்பாசன ஆதாரத்தில் குடிமராமத்து வேலைகளை மேற்கொண்டு பொதுமக்களிடமிருந்து குடிமராமத்து கட்டணத்தை நிர்ணயித்து வசூலிக்கலாம்.


•ஊராட்சி ஒன்றிய நீர்ப்பாசன ஆதாரங்களில் மீன் பிடிப்பதற்கான உரிமம் வழங்கலாம்.


(ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்)


கிராம சபை கேள்வி பதில் :


1. எந்தெந்த தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் ?


1. ஜனவரி 26 (குடியரசு தினம்)

2. மே 1 (உழைப்பாளர் தினம்)

3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்)

4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி)


2. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டம் நடைபெறுமா?


ஆம். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில்தான் கிராம சபை கூட்டம் நடைபெறும்.


3. கிராம சபை கூட்டம் எந்த இடத்தில் நடக்கும்?


உங்கள் கிராம பஞ்சாயத்திற்கு உட்படப் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும். பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, வேறு ஒரு பொது இடத்திலோ கிராம சபை கூட்டம் நடைபெறும்.


4. கிராம சபையில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?


கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் கிராம சபையில் கலந்துகொள்ளலாம். ஆண்கள், பெண்கள், முதியவர்கள், பட்டியல் பிரிவினர் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.


5. கிராம சபையின் தலைவர் யார்?


கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவர். தலைவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் கிராம சபையின் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார்.


6. கிராம சபையில் குறைந்தபட்சம் எத்தனைப் பேர் கலந்துகொள்ள வேண்டும்?


உங்கள் கிராம பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 பேர் என்றால், குறைந்தபட்சம் 50 பேர் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் கிராம சபை ஏற்றுக்கொட்டப்படும். அதேபோல, உங்கள் கிராமத்தின் மக்கள் தொகை 501 முதல் 3000 வரை என்றால் 100 பேர் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும். 


3001 முதல் 10,000 பேர் கொண்ட கிராமத்தில் 200 பேரும் , 10,000 க்கு மேல் மக்கள் தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை. [அரசாணை நிலை எண் 130 ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை நாள் 25.09.2006 ]


7. தேவையான குறைவெண் வரம்பு இல்லாதபோது கிராம சபையின் நிலை என்ன?


அரசாணையில் குறிப்பிட்டுள்ள குறைவெண் வரம்பு இல்லாதபோது கிராம சபை கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.


8. கிராம சபை தீர்மானம் எங்கெல்லாம் செல்லுபடி ஆகும்?


சட்ட மன்ற நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கு உண்டு. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட எந்த ஒரு கிராம சபை தீர்மானமும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும். அரசு அலுவலகங்களிலும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.


9. எந்தெந்த விசயங்களுக்காகக் கிராம சபையில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றலாம்?


உங்கள் கிராமத்திற்கு சம்மந்தப்பட்ட எந்த ஒரு விசயத்திற்கும், தேவைக்கும் கிராம சபை தீர்மானம் நிறைவேற்றலாம். பக்கத்துக்குக் கிராமத்தின் பிரச்சனையைத் தீர்க்கவோ அல்லது மாநில அளவில் சில கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்றோ உங்கள் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுவது பயனளிக்காது. 


உதாரணமாக, உங்கள் கிராமத்தில் இருக்கும் மதுக்கடையை மூடத் தீர்மானம் கொண்டுவரலாம். ஆனால், தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றுவது பயனளிக்காது. மேலும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதாக உங்கள் கிராம சபை தீர்மானம் இருக்க வேண்டும். அதாவது மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம், தனி நபர் உரிமை போன்ற விசயங்களை மீறுவதாக உங்கள் கிராம சபை தீர்மானம் இருக்கக் கூடாது.


10. தீர்மானம் இந்த வடிவில்தான் இருக்கவேண்டும் என வரைவு ஏதும் உள்ளதா?


இல்லை. இயல்பான வாக்கியங்களைக் கொண்டே கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றலாம். இந்த வடிவில்தான் இருக்கவேண்டும் என எந்த நிபந்தனையும் இல்லை.


11. மக்கள் முன்மொழியும் தீர்மானத்தை பஞ்சாயத்துத் தலைவரோ அதிகாரிகளோ நிராகரிக்க முடியுமா?


முடியாது. கிராம சபை மக்களுக்கான சபை. பஞ்சாயத்துத் தலைவரோ, அதிகாரிகளோ மக்களின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது. கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சரி அல்லது தவறு என முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.


12. கிராம சபை தீர்மானத்தின் நகலைக் கிராம மக்கள் பெறமுடியுமா? அதற்குக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டுமா?


கிராம சபை தீர்மானத்தின் நகலைக் கிராம மக்கள் நிச்சயம் பெறமுடியும். அதற்குக் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.


13. கிராம சபையில் எத்தனைத் தீர்மானங்கள் நிறைவேற்றலாம்?


இத்தனை தீர்மானங்கள்தான் நிறைவேற்ற வேண்டும் என்ற வரையறை ஏதும் இல்லை. எண்ணிக்கை வரம்பு இல்லை என்ற காரணத்தால் எண்ணற்ற தீர்மானங்கள் நிறைவேற்றுவதில் பயனில்லை. முக்கியமான மற்றும் குறிப்பிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி அதை நடைமுறைப்படுத்தி பயன்பெற வேண்டும்.


14. கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்பு யாருடையது?


பஞ்சாயத்துத் தலைவர், துணைத்தலைவர் , வார்டு உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகளே கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்புடையவர்கள்.


 கிராம இளைஞர்கள் , தன்னார்வலர்கள் முயற்சி எடுத்து, அரசு அதிகாரிகளுக்கு மற்றும் தலைவர் உட்படப் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு நினைவூட்டல் அனுப்பி கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்தலாம்.


15. கிராம சபை தீர்மானம் எத்தனை நாட்களுக்குச் செல்லுபடி ஆகும் ?


கிராம சபை தீர்மானம் காலாவதியே ஆகாது. ஒருமுறை சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, சூழலின் தன்மை கருதி விவாதித்து [மறுபரிசீலனை செய்தோ, மாற்றம் செய்தோ அல்லது மறுத்தோ] வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் முந்தைய தீர்மானம் செயல் இழக்கக் கூடும்


16. சிறப்பு கிராம சபை என்றால் என்ன?


தமிழகத்தில் நான்கு நாட்கள் கிராம சபை கூட்டம் கட்டாயம் நடைபெறும். 


[1. ஜனவரி 26 (குடியரசு தினம்) 2. மே 1 (உழைப்பாளர் தினம்)

3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்) 4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி)] இந்தக் கிராம சபைகளையும் தாண்டி கூடுதலாகக் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மக்கள் நினைத்தால் கிராம சபை கூட்டத்தை நடத்தலாம். அவ்வாறு கூட்டப்படும் கிராம சபை, சிறப்பு கிராம சபை என்று அழைக்கப்படும்.


17. சிறப்பு கிராம சபையைக் கூட்ட பஞ்சாயத்துத் தலைவர் முன்வராவிட்டால் என்ன செய்வது?


சிறப்பு கிராம சபை கூட்டத்தை கூட்டப் பஞ்சாயத்து தலைவர் மறுத்தால், மக்கள் தங்களுக்குள் ஒரு தலைவரை நியமித்துக் கொண்டு [சிறப்பு கிராம சபைக்கு மட்டும் அவர் தலைவராக இருப்பர்] சிறப்பு கிராம சபையைக் கூட்ட மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கலாம்.


18. கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்த என்ன செய்ய வேண்டும்?


கிராம இளைஞர்கள் , தன்னார்வலர்கள் முயற்சி எடுத்து, அரசு அதிகாரிகளுக்கு மற்றும் தலைவர் உட்படப் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு நினைவூட்டல் அனுப்பித் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்தலாம்.


19. முன்னுதாரண கிராம சபையில் காணப்படும் முக்கிய விசயங்கள் என்னென்ன?


* மக்கள் சொல்வதை தலைவர் மற்றும் அதிகாரிகள் கவனமாக கேட்பது

* மக்களின் சந்தேகங்களுக்கு முறையாகப் பதில் அளிப்பது

* மகளிர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கு உரிய அங்கீகாரம் வழங்குதல்

* பஞ்சாயத்தின் வரவு செலவு கணக்கை மக்கள் முன் வாசித்துக் காட்டுதல்

* கிராம வளர்ச்சிக்காக விவாதிப்பது


20. கிராம சபையில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டுமா? அதிகாரிகள் வந்தால் நாற்காலியில் அமரலாமா?


அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். முதலமைச்சரே வந்தாலும் கிராம சபையில் தரையில்தான் அமரவேண்டும்.


21. பக்கத்து ஊர் கிராம சபையில் நான் கலந்து கொள்ளலாமா?


கலந்துகொள்ளலாம். ஆனால், உங்களின் வாக்கு எந்தப் பஞ்சாயத்தில் உள்ளதோ அந்தக் கிராம பஞ்சாயத்தின் கிராம சபைக்கு மட்டுமே நீங்கள் உறுப்பினர். மற்றோரு கிராமத்தின் கிராம சபையில் நீங்கள் பார்வையாளராக இருக்கலாம்.


22. இவர் கிராம சபையில் கலந்துகொள்ள கூடாது என யாரையாவது ஒதுக்கி வைக்க முடியுமா?


முடியாது. உங்கள் கிராம பஞ்சாயத்தின் வாக்காளர் அனைவரும் உங்கள் கிராம சபையின் உறுப்பினர் ஆவார்கள். எனவே, அவர்கள் அனைவரும் கிராமசபையில் கலந்துகொள்ள உரிமை படைத்தவர்கள்


உள்ளாட்சி அமைப்புகள்: அடிப்படை கேள்விகள்


1. ஏன் இதை புதிய பஞ்சாயத்து என அழைக்கிறோம்?


1993 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பஞ்சாயத்துச் சட்டம், இதற்கு முன்பு இருந்த பஞ்சாயத்து சட்டத்தில் இல்லாத பல புதிய சரத்துக்களை கொண்டிருந்தது. அதில் குறிப்பாக; மாநில நிதி ஆணையம், மாநில தேர்தல் ஆணையம், கிராம சபை, மகளிர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கு இடஒதுக்கீடு போன்ற முக்கிய சரத்துக்களை இருந்தன. 


எனவே இப்புதிய பஞ்சாயத்துச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகள் என்பதால் இவற்றை புதிய பஞ்சாயத்து அமைப்புகள் என அழைக்கிறோம்.


2. பஞ்சாயத்து நிர்வாகம் எத்தனை அடுக்குகளைக் கொண்டது?


மூன்று அடுக்குகளைக் கொண்டது. 


1. கிராம பஞ்சாயத்து


2. பஞ்சாயத்து ஒன்றியம்


3. மாவட்ட பஞ்சாயத்து


3. தமிழகத்தில் மொத்தம் எத்தனைக் கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன?


தமிழகத்தில் மொத்தம் 12,618 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன


4. நகர உள்ளாட்சி அமைப்புகள் என்னென்ன?


பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகியவை நகர உள்ளாட்சி அமைப்புகள் ஆகும்


5. ஒரு கிராம பஞ்சாயத்து எத்தனை உட்கிராமங்களை கொண்டிருக்கும்?


இது ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திற்கும் மாறுபடும். ஒரே ஒரு உட்கிராமம் உள்ள பஞ்சாயத்தும் உள்ளது , பல உட்கிராமங்கள் உள்ள கிராம பஞ்சாயத்தும் தமிழகத்தில் உள்ளது. சராசரியாக ஏழு முதல் எட்டு உட்கிராமங்களை கொண்டிருக்கும் ஒரு கிராம பஞ்சாயத்து.


நன்றி..

பொங்கல் காப்பு கட்டும் போது

 *நம் வீடுகளில் காப்புக்கட்டுவது*

*பற்றி சிறு விளக்கம்* !!!!


1. *ஆவாரம் பூ*

2. *பீளைப்பூ*

3. *வேப்பிலை*

4. *தும்பை செடி*

5. *நாயுறுவி செடி*

6. *தலைப்புள்*


*என 5 வகையான செடிகள் காப்புகட்டிற்கு பயண்படுத்த வேண்டும்*.


*ஆனால் தற்காலங்களில் 3 வகை மட்டுமே பயண்படுத்துகிறார்கள்* !!


*தைமாதம் முதல் உத்ராயணத்தில் ஏற்ப்படும் பருவ நிலை மாற்றத்தால் நிறைய நோய்கள் மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்கும்*.


*மார்கழிமாதம் ஓசோன் படலம் பூமிக்கு அருகில் இருப்பதால் அதிக கதிர்வீச்சு பாதிப்பு வராமல் இருக்க வாசலில் கோலமிட்டு மாட்டுசானத்தில் பூசனிப்பூ வைத்திருப்பார்கள்*.


*மார்கழி மாதம் வைகுண்டம் செல்ல வேண்டிய முன்னோர்கள் இங்கேயே தங்கி விடாமல் இருக்க அவர்கள் வாசனையை நீக்க அவர்கள் பயன்படுத்தி வந்த பொருட்களை தீயிட்டு கொளுத்துவார்கள்*.


*மேலும் பருவ நிலை* *மாற்றத்தால் நோய்* *தொற்று வராமல் இருக்க* *வீட்டிற்கு சுண்ணாம்பு பூசி*

*பயன்படுத்தாத பழைய* *பொருட்களை எரிப்பார்கள்*

*காப்பு கட்டுவார்கள் இது போகி பண்டிகையாகும்*.


1) *ஆவாரம்பூ*

*தைமாதம் மகர மாதம் தட்சிணாயணம் முடிந்து உத்திராயணம் ஆரம்பமாகும் காலம் சூரியன் வடக்கு நோக்கி நகர்வது போல் தோற்றம் வரும்*. *பருவநிலை* *மாற்றத்தின் தாக்கம்* *அதிகரிக்கும்* .

*சூரியனின் தீட்சன்யம் அதிகமாக பூமியில் விழும்  இதற்கு கரிநாள் என பஞ்சாங்கத்தில் போடப்பட்டிருக்கும்*. 

*இந்த வெப்பத்தின் தாக்கம் பல நோய்களை கொண்டுவரும்*.


*நமது கிராம்ப்புறங்கில் நடைபயணம் செய்பவர்கள் இந்த வெப்ப தாக்கம் வராமல் இருக்க ஆவாரம் பூவை தலை பாகைக்குள் வைத்து கட்டிக்கொண்டு செல்வார்கள்* 


*சில கிராமங்களில் சமையல் அறையில் அதிக உஷ்ணம் வராமல் இருக்க ஆவாரம் பூவை கொத்தாக் வைத்திருப்பார்கள்*.


*உஷ்ணதாக்கத்தால் உடல் சமநிலை இழக்காமல் இருக்க ஆவாரை பயன்படும்* !!


*மேலும் மகர சங்கராந்தி நுழையும் காலம் இம்மாத சங்காரகனால் அதிகபாதிப்பு தைமாத்தில் வரும் இதனை தடுக்கவும் ஆவாரை பயன்படும்*)


2) *பீளைப்பூ*

*இது உடலில் உள்ள*

 *நீர்சத்துக்களையும்*

 *தாதுக்களையும்* *சமநிலையில் வைக்கும்* 

*உஷ்ணத்தால் கிட்னி* *பாதிக்கப்படாமல்* *பாதுகாக்கும்*.


3) *வேப்பிலை*

*உஷ்ணத்தால் சருமம் பாதிக்கப்பட்டு அம்மை தோல்நோய்கள் வராமல் இருக்க வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது*.


4) *நாயுருவி*

*வெப்பத்தால் பக்கவாதம் (sunstroke) வராமல் இருக்க நரம்புமண்டம் பாதிக்கப்படாமல் இருக்க புதனிற்குறிய நாயுருவி காப்புக்கட்டிற்கி பயன்படுத்தப்படுகறது*.


5) *தும்பை செடி*

*நல்ல எதிர்ப்புசக்தியையும் இரத்தத்தில் மற்றும் உடலில் உள்ள முக்கிய நீர் பகுதி இதயத்தை நுரையீரலை கபாலத்தை நாசியை சூழ்ந்துள்ள நீர்ப்பகுதிகளில் நோய்தொற்று வராமல் பாதுகாக்கவும் மயக்கம் வராமல் பாதுகாக்கவும் பிதுர்களின் தோஷம் வராமலும் தடுக்கிறது*.

*மரபணு நோய்*)


6) *தலைப்புள்* *கணம்புள்* 

*என்றும் சொல்வார்கள்*.

  *கணம்புள்* *நாயனார்* *தன்* *இருப்பிடத்தை குளிர்விக்க இதனை பயன்படுத்தினார்*)

*இது வீட்டிற்குள் உஷ்ண பாதிப்பை தராமல் உள்வெப்பநிலையையாக (AC போல்) வைக்க காப்புகட்டப்படுகிறது*.


*அனைவரும் காப்புக்கட்டுங்கள்*.


*நம்முன்னோர்கள் நமக்கு வழங்கிய ஆரோக்ய வாழ்வின் பாரம்பர்யத்திற்கு நன்றி சொல்லுங்கள்*.


*அனைவரும் நல்ல ஆரோக்யத்துடன் இருங்கள்*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

சீத்தா பழம்

 சுவையும் அதிகம்... சத்தும் அதிகம்!


கனிகள் என்பவையே சத்துக்களும், சுவையும் நிரம்பியவையும்தான். அவைகளில் சீத்தாப்பழம் மிகுந்த சுவையும், சத்துக்களையும் தன்னகத்தே கொண்டது. இக்கனியின் தனித்தன்மைகளை டயட்டீஷியன் உத்ரா விளக்குகிறார்...


*Custard apple என அழைக்கப்படுகிற சீத்தாப்பழம் வைட்டமின்-சி, பி-காம்ப்ளக்ஸ், இரும்புச்சத்து, வைட்டமின்-ஏ, நார்ச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் முதலான ஊட்டச்சத்துக்கள் கொண்டது. எனவே, சீத்தாப்பழத்தை குழந்தைகள், சிறுவர், சிறுமியர், நடுத்தர வயதினர், முதியோர்கள் என அனைத்து தரப்பு வயதினரும் எவ்வித தயக்கமும் இல்லாமல் தாராளமாக உண்ணலாம்.


* சீத்தாப்பழத்தில் உள்ள ‘பி’ காம்ப்ளக்ஸ் ஆஸ்துமா மற்றும் சளி போன்ற பிரச்னைகளைக் குறைக்க உதவுகிறது. அது மட்டுமில்லாமல், இந்தப் பழம் நமது தசைப்பகுதிகளை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள மிகவும் உறுதுணையாக செயல்படுகிறது.


* ரத்த அழுத்தத்தால் அவதிப்படுபவர்களுக்கு சீத்தாப்பழம் சிறந்த மருந்தாக உள்ளது. ஏனெனில், இதில் உள்ள பொட்டாசியம் ரத்த கொதிப்பைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது.


* ஆயுர்வேத மருத்துவத்தில் உடலில் ஏற்படுகிற புண்களைக் குணப்படுத்த சீத்தாப்பழம் தலைசிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இப்பழத்தின் இலைகள் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுவதாக இந்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


* சீத்தாப்பழத்தில் வைட்டமின்-ஏ ஏராளமாக உள்ளது. இது தலைமுடியையும், சருமத்தையும் பாதுகாக்க உதவுகிறது.


* சீத்தாப்பழம் ரத்தசோகை குறைபாட்டைத் தடுக்கவல்லது. குறிப்பாக, பெண்களுக்கு மிகவும் ஏற்ற மருத்துவ குணம் நிறைந்த கனியாக திகழ்கிறது.


* நம்முடைய உடல் ஆரோக்கியத்துக்குப் பொருந்தும் வகையில், எண்ணற்ற பயன்களைக் கொண்டுள்ள இந்தப் பழத்தை உணவோடு சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னதாகவும், உணவு உண்ட ஒரு மணிநேரத்துக்குப் பிறகும் சாப்பிடுவதே முழுமையான பலன்களைத் தரும்.


* கருவுற்ற பெண்களுக்கு மிகச் சிறந்த உணவாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் கனியாக சீத்தாப்பழம் உள்ளது. இப்பழத்தை கர்ப்பிணிகள் தினமும் சாப்பிட்டு வர, சிசுவின் வளர்ச்சி ஆரோக்கியமாக அமையும்.


* சீத்தாப்பழத்தில் நார்ச்சத்து 5.10 கிராம் அளவு உள்ளது. எனவே, மலச்சிக்கல் குறைபாட்டைச் சரி செய்து, வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள இந்தக் கனி பயன்படுகிறது.


* போதுமான உடல் எடை இல்லாமல் அவதிப்படுபவர்கள் சீத்தாப்பழத்தின் சதைப்பகுதியைத் தேனில் ஊற வைத்து, தினமும் சாப்பிட்டு வர வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் உடல் எடை கணிசமாக அதிகரிக்கும்.


* சீதாப்பழத்தில் வைட்டமின் பி1, பி2 என ஏராளமான வைட்டமின்கள் உள்ளன. ஒரு சராசரி சீத்தாப்பழத்தில் பி 1 வைட்டமின் - 0.13 Mg, பி 2 வைட்டமின் - 0.09 Mg, பி 3 வைட்டமின் - 0.69Mg, பி5 - 0.19 Mg, வைட்டமின் பி 6 - 0.07 Mg என்ற விகிதத்தில் அமைந்துள்ளது. இது தவிர மக்னீசியம் 38.47 Mg-யும், பொட்டாசியம் 278 Mg-யும் புரோட்டீன் 1.62G, கொழுப்பு 0.67G-யும் அஸ்கார்பிக் ஆசிட் 21.51 Mg-யும் காணப்படுகிறது.  


* சீத்தாப்பழம் தன்னிடத்தில் அளவுக்கு அதிகமாக குளுக்கோஸைக் கொண்டுள்ளது. எனவே, சர்க்கரை நோயாளிகள் இதனை அறவே தவிர்ப்பது நல்லது.


* சர்க்கரை நோயால் பாதிக்கப்படாதவர்கள் தினமும் 75 கிராம் முதல் 80 கிராம் வரை சாப்பிடலாம். அதிகமாக உட்கொண்டால் ரத்தத்தின் சர்க்கரையின் அளவைக் கண்காணிக்க வேண்டும்...

போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...