ஏப்ரல் 7-ம் தேதி 'உலக சுகாதார தினம்'

'உலக சுகாதார தினம்' 1950 முதல்  ஆண்டுதோறும் அப்போதைய அவசியத்தை ஒட்டிய ஒரு கருப்பொருளில் ஏப்ரல் 7-ம் தேதி  உலக சுகாதார மையம் (World Health Organisation) தொடங்கப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளை,  உலக  சுகாதார தினமாக கொண்டாடுகிறோம். 

'சுத்தம் சோறு போடும்', "கூழானாலும் குளித்துக் குடி', "கந்தையானாலும் கசக்கிக் கட்டு', "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்று தமிழில் ஆரோக்கியம் குறித்து கூறப்பட்ட பழமொழிகளை அறியாத தமிழர்கள் இருக்க முடியாது. தங்களுடைய வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் தமிழர்கள், வீதியையும் பொது இடங்களையும் பொது வாகனங்களையும் அப்படி இருக்கவிடுகிறார்களா?பொது இடங்களில் புகைப்பிடிக்கக்கூடாது என்று சட்டமே இயற்றப்பட்டுவிட்டது. இன்னமும் பொது இடங்களில் புகைப்பது நிற்கவில்லையே!
"இவ்விடம் சிறுநீர் கழிக்காதீர்' என்ற எச்சரிக்கைப் பலகையைப் பார்த்தவுடன் நினைவுக்கு வந்தவர்போல அதன் எதிரிலேயே கழிப்போர் எத்தனை பேர்? படித்தவர்களும் இதில் விதிவிலக்கு அல்ல.
பஸ், ரயிலில் பயணம் செய்வோர் சாக்லேட் காகிதங்களையும் தின்பண்டங்கள் சுற்றப்பட்ட காகித உறைகளையும் பிளாஸ்டிக் பொட்டலங்களையும், பான் பராக் போன்றவற்றின் உறைகளையும் அவர்கள் உட்கார்ந்திருக்கும் இருக்கைகளுக்குக் கீழேயோ எதிரிலேயோ கூச்சமே இன்றி போடுகிறார்கள். சப்போட்டா, கமலா ஆரஞ்சு போன்ற பழங்களைச் சாப்பிடுவோர் அவற்றின் கொட்டைகளை பக்கத்தில் இருப்பவரின் காலில் தெறிக்குமே என்ற கவலையே இல்லாமல் பலமாக தரையில் துப்புகிறார்கள்.
பான் பராக் போன்ற மெல்லும் புகையிலை வஸ்துகளைச் சுவைப்போர், வாயில் ஊறும் நீரை இனி வாய் கொள்ளாது என்றால் அப்படியே காலுக்குக் கீழே, பஸ், ரயில்களின் ஜன்னல் விளிம்புகள், கோலமிட்ட வீதிகள் என்று எங்கு வேண்டுமானாலும் துப்பிவிடுகிறார்கள். எச்சில் துப்புகிறவர்கள் அடுத்தவர் நலனை நினைத்துப் பார்ப்பதே கிடையாது. பஸ் ஓடும்போதே எச்சில் துப்புகிறவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.
ஏதும் அறியாத பிஞ்சுக் குழந்தைகளும், ஏழை - எளியவர்களும், கோயில்களுக்குப் பிரார்த்தனை செய்துகொண்டு வெறுங்காலுடன் நடப்பவர்களும் பயன்படுத்தும் வீதிகளாயிற்றே என்று பாராமல் எச்சில் துப்பி சாலைகளை அசுத்தப்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் கல்வியறிவு வளரவளரத்தான் இப்படி பொது இடங்களிலும் அசுத்தம் அதிகமாகி வருகிறது என்பது வருத்தம் தரும் விஷயமாகும்.
ஆட்டோ, பஸ், கார், லாரி, வேன் ஓட்டுனர்களிடம் பான்-பராக் போன்ற பொட்டலம் சாப்பிடும் பழக்கமும், அதை அப்படியே சாலையில் வாந்தி எடுத்தாற்போல் துப்பும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. புகையிலையும் போதைப் பொருளும் தடவப்பட்ட இந்த பாக்குகளால் வாய்ப்புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
நம்முடைய உடலில் சுரக்கும் ஜீரண நீர்கள், ரத்தம் போலத்தான் உமிழ்நீரும். அது உணவை ஜீரணிப்பதற்காக உடலால் இயற்கையாக சுரக்க வைக்கப்படுகிறது. அதை பாழ்படுத்துவதும் இப்படி புளிச்புளிச்சென்று துப்பிக்கொண்டே இருப்பதும் உடல் நலத்தையும் சீரழித்துவிடும் என்று உணர்ந்து திருந்துவது நல்லது.
பொது இடங்களில் குப்பைபோட்டு அசுத்தம் செய்வோருக்கும், எச்சில் துப்புவோருக்கும் அபராதம் அல்லது சிறு தண்டனை விதிப்பது அவசியமாகும். தாங்கள் அசுத்தப்படுத்திய இடத்தைச் சுத்தம் செய்ய வேண்டும் என்ற குறைந்தபட்ச தண்டனையையாவது அளித்தால்தான் தமிழ்நாடு தூய்மையான மாநிலமாக மாறும்.


S.SIVASUBRAMANIAM,
President 
CENTER FOR CONSUMER HUMAN RESOURCE AND ENVIRONMENT PROTECTION - CITIZEN CENTER
PANDALUR, PANDALUR TALUK & POST
THE NILGIRIS 643 233.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...