*பாகப்பிரிவினை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியனவ*

 *பாகப்பிரிவினை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியனவ*

*தந்தை வழி சொத்தில் வாரிசுகளுக்குக் கிடைக்கும் சொத்துரிமைதான் பாகப்பிரிவினை*.

அதாவது, குடும்பச் சொத்து உடன்படிக்கை பத்திரம். குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்தின்பேரில் சமமாகவோ அல்லது வாரிசுகள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் விதமாகப் பிரித்துக் கொள்ள முடியும்.

பூர்வீகச் சொத்துக்களை வாரிசுகளுக்கு சமமாகப் பிரிக்கப்படாதபட்சத்தில் அல்லது அவர்களில் யாரேனும் ஒருவருக்கு ஆட்சேபனை இருந்தால் பாகப்பிரிவினையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.

ஒருவருக்கு நான்கு வாரிசுகள் இருந்து, அதில் மூன்று வாரிசுகளுக்கு மட்டும் பாகம் பிரிக்கப்பட்டு, ஒரு வாரிசுக்கு மட்டும் பாகம் கிடைக்கபெறாமல் இருந்தால், 

அந்தப் பாகப்பிரிவினை செல்லாது என அவர் நீதிமன்றத்தை நாடலாம். பாக பிரிவினை பதிந்திருந்தால் பின்னால் பிரச்சினை ஏற்படாது.

தான பத்திரம்..!

சொத்து உரிமை மாற்றம் செய்து தருவதில் உள்ள ஒருமுறை, தான பத்திரம் மூலம் வழங்குவது. குறிப்பாக, நெருங்கிய குடும்ப உறவுகளுக்குள் சொத்து உரிமை மாற்றம் செய்துகொள்ளும்போது இந்த முறையைக் கையாளலாம்.

ஒருவர் மற்றொருவரிடமிருந்து பண பலன்களை பெற்றுக்கொண்டு சொத்து உரிமை மாற்றம் செய்கிறபோது, அதை சொத்து விற்பனை என்று குறிப்பிடுகிறோம். இதுவே, தான பத்திரம் மூலம் மாற்றும்போது விற்பனை என்று ஆகாது.

அதாவது, சகோதரர் தனது சகோதரிக்கு சொத்தை தானமாக வழங்கலாம். சொத்தை தானமாக வாங்கியவர் அதை தனது கணவருக்கு தானமாகக் கொடுக்கலாம். இப்படி செய்வதன் மூலம் முத்திரைத்தாள் கட்டணம் இல்லாமல் உரிமை மாற்றம் செய்து கொள்ளலாம்.

ஆனால், தான பத்திரம் பதிவதற்கான கட்டணம் சொத்து வழிகாட்டி மதிப்பில் 1 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய். இதுதவிர, பதிவு கட்டணம் இரண்டாயிரம் ரூபாய் கட்ட வேண்டும். தானம் கொடுப்பதை, தானம் வாங்குபவர் ஏற்று கொண்டு, அந்த இடத்தின் சுவாதீனத்தை, உடனடியாக அடைய வேண்டும்.

அந்த இடத்தின் மீதான வருவாய் ஆவணங்கள், பிற ஆவணங்களை உடனடியாக தானம் வாங்குபவர் தனது பெயருக்கு மாற்ற வேண்டும். தானம் ரத்து செய்ய இயலாத ஒன்று.

உயில்..!

இது விருப்ப ஆவணம்; சொத்தை தனிப்பட்ட முறையில், தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு எழுதித்தரும் முறைதான் உயில் எனப்படும். ஒருவர், தான் சம்பாதித்த தனிப்பட்ட சொத்துக்களை தனது இறப்புக்குப் பிறகு, 

தான் விரும்பும் நபருக்கு சிக்கல் இல்லாமல் போய்சேர வேண்டும் என்பதற்காக தனது சுயநினைவோடு எழுதித் தருவது. ஆனால், பூர்வீகச் சொத்தை உயிலாக எழுத முடியாது.

தனிப்பட்ட சொத்தை தனது வாரிசுகளுக்குத் தான் உயில் எழுதவேண்டும் என்கிற கட்டாய மில்லை. ரத்த உறவு அல்லாத மூன்றாம் நபர்களுக்கோ, அறக்கட்டளைகளுக்கோ உயிலாக எழுதித் தரமுடியும். அதேநேரத்தில், உயில் எழுதி வைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு சொத்து சேர்ந்துவிடும்.

மனநிலை சரியில்லாத நிலையில் அல்லது குடிபோதையில் எழுதப்பட்ட உயில் செல்லாது. மேலும், மைனர் மீது உயில் எழுதப்படுமாயின் அதற்கு காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

வாரிசுச் சான்றிதழ்..!

வங்கி வைப்புநிதி, பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்திருந்து எதிர்பாராமல் இறக்கும் பட்சத்தில் நாமினிகளிடத்தில் இந்த சொத்துக்கள் ஒப்படைக்கப்படும். 

ஆனால், நாமினி இல்லாதபட்சத்திலோ அல்லது நாமினி மீது வாரிசுகள் ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்திலோ வாரிசுச் சான்றிதழ் அடிப்படையில் அந்த சொத்துக்களை பெறலாம்.

ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்பட்சத்தில் நீதிமன்றம் வழங்கும் இறங்குரிமை சான்றிதழ் அடிப்படையில் சொத்துக்கள் ஒப்படைக்கப்படும். ஒருவர் இரு திருமணம் செய்திருந்தால், அவரது இரு மனைவி குழந்தைகள், முதல் மனைவி ஆகியோர் வாரிசுகள் ஆவர்.

பொதுவாக, சொத்து பாகம் பிரிக்கும்போது குடும்பத்தின் அனைத்து வாரிசுகளிடமும் சம்மதம் பெறவேண்டும். ஒரு குறிப்பிட்ட வாரிசுக்குத் தெரியாமல் அல்லது அவரை புறக்கணித்து விட்டு பிரிக்கப்படும் பாகப்பிரிவினை செல்லாது. 

நீதிமன்றத்தில் இதை மறைத்து தீர்வு பெறப்பட்டிருந்தால், பின்னாட்களில் இது தெரியவரும்போது அந்த தீர்வு ரத்து செய்யப்படும்.

முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணத்தை இந்து திருமணச் சட்டம் அங்கீகரிக்கவில்லை. இதனால் இரண்டாவது மனைவிக்கு கணவனது சொத்தில் உரிமையில்லை. ஆனால், அவர் வசமிருக்கும் தனிப்பட்ட சொத்தில் உரிமை கோரமுடியும்”

பொதுவாக, சொத்து பாகப்பிரிவினையில் இதுபோன்று பல அடிப்படை விஷயங்களை கவனித்தாலே சிக்கலில்லாமல் உறவுகளை கையாள முடியும். வழக்கு நீதிமன்றம் என இழுத்தடிப்புகள் இல்லாமல் சொத்துக்களை பரிமாற்றம் செய்துகொள்ளலாம்

*தனியொருவரே ஒரு சொத்தை வைத்திருந்தாலோ, வாங்கியிருந்தாலோ அந்த சொத்துக்கு பாகப்பிரிவினை என்னும் பிரச்சனை இல்லை. 

கூட்டாக வாங்கியிருந்தால் (இரண்டுபேருக்கு மேல் சேர்ந்து வாங்கினால்) அதை ஒரு காலக்கட்டத்தில் பாகப் பிரிவினை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படும். அல்லது நமது பெற்றோர்கள், முன்னோர்கள் வாங்கிய சொத்தாக இருந்தால் அவர்களின் காலத்துக்குப்பின் அவரின் வாரிசுகள் அந்த சொத்தை பங்கு பிரித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்*.

சொத்தில் பங்கு இருப்பவர்கள், அந்த சொத்தில் எவ்வளவு பங்கு ஒவ்வொருவருக்கும் சேர வேண்டும் என கணக்கிட்டு, சுமூகமாக அவர்களாகவே பாகப்பிரிவினையை செய்து, அதை ஒரு பத்திரமாக எழுதிப் பதிவு செய்து கொள்ளலாம்.

விவசாய நிலங்களை பாகம் செய்து கொள்ளும்போது, வாய்மொழியாகவே பேசி அவரவர் பங்கு நிலத்தை பாகமாகப் பிரித்துக் கொள்ளலாம். 

நம் குடும்ப பெரியவர்கள் முன்னிலையிலும் பேசிக் கொள்ளலாம். அதை பத்திரத்தில் எழுதிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு பங்குபிரித்தபடியே பட்டாவை மாற்றிக் கொண்டால் போதுமானது. 

பாகப்பிரிவினை என்பது “சொத்து மாறுதல்” என்ற கணக்கில் வராது. எனவே இந்திய பதிவுச் சட்டப்படி அதை பத்திரமாக எழுதிப் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என இந்திய சுப்ரீம் கோர்ட் பல வழக்குகளில் குறிப்பிட்டுள்ளது. 

இருந்தபோதிலும், நாம் அவரவர் ஞாபகத்துக்காக அதை ஒரு சீட்டில் (பேப்பரில் எழுதி) அதில் சம்மந்தப்பட்டவர்கள் கையெழுத்தையும் பெற்று ஒவ்வொருவரும் ஒரு காப்பியை வைத்துக் கொள்ளலாம். 

இதையே “வாய்மொழி பாகப் பிரிவினை” என்றும் “கூர்சீட்டு” (அதாவது கூர் போட்டுக் கொண்ட கணக்குச் சீட்டு) என்றும் சொல்கிறோம். அதை பத்திரப் பதிவு அலுலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்றால், அந்த கூர்சீட்டில் இன்றைய தேதியில் சொத்துக்களை பிரித்துக் கொண்டதாக எழுதிக் கொள்ளமாட்டோம். 

அதற்குப்பதிலாக, பங்குதாரர்கள் ஏற்கனவே வாய்மொழியாக சொத்தை முன்னரே பிரித்துக் கொண்டதாகவும், அதை இன்று ஒரு ஞாபகச் சீட்டாக எழுதிக் கொண்டோம் என்று தான் அதில் எழுதி இருக்க வேண்டும். 

ஆனால், இன்றே சொத்துக்களை பாகமாகப் பிரித்து எடுத்துக் கொண்டுள்ளோம் என்று எழுதி இருந்தால், அது சொத்தை மீது பரிமாற்றம் நடைபெற்றதாகக் கருதி, அதை பதிவு செய்ய வேண்டிய கட்டாயாமும் ஏற்பட்டுவிடும்.

மிக அதிகமானவர்கள் இந்த தவறை செய்திருக்கிறார்கள். பத்திரம் எழுதும் அனுபவம் இல்லாதவர்கள், எதையோ எழுதி வைத்து விடுகிறார்கள். பிரச்சனை என்று கோர்ட்டுக்குப் போகும்போது இத்தகைய பத்திரம் சட்டப்படி செல்லுமா, செல்லாதா என்ற சட்டப் பிரச்சனையே வந்துவிடுகிறது. எனவே சட்டம் தெரிந்தவர், அல்லது வக்கீல் மூலமாக இதை எழுதிக் கொள்வது நல்லது.

ஆனாலும், நகரங்களில் உள்ள சொத்துக்களை பிரித்துக் கொள்ளும்போது, பாகப் பத்திரம் எழுதி கண்டிப்பாக பதிவு செய்வதே சாலச்சிறந்தது. இங்கு பட்டா மாற்றிக் கொள்ள ஒரு பத்திரம் தேவைப்படும். மேலும், சொத்து பாகம் ஆகிவிட்டது என்பதற்கான சாட்சியம் (ஆதாரம்) இந்தப் பதிவான பாகப் பிரிவினைப் பத்திரம் தான். இல்லையென்றால், சொத்து இன்னும் பாகம் ஆகவில்லை என்றே கருத வேண்டியிருக்கும்


கூடலூர் நுகர்வோர் மனிதவள

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் 

நீலகிரி மாவட்டம்

No comments:

Post a Comment

போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...