கல்வி கடன் விளக்கம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்காக கல்விக் கடனுதவி வழங்கும் திட்டத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் வழங்கும் முறையை இந்திய அரசு கொண்டு வந்துள்ளது.

கல்விக் கடனுதவி இலவசமாக வழங்கப்படுவதல்ல.

அந்த தொகை குறைந்த வட்டியோடு பிற்காலத்தில் திருப்பி செலுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களும் கல்வி கற்க வேண்டும் என்கிற சிந்தனையின் அடிப்படையில் அந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் பலவீனமான, பாதிக்கப்பட்ட மக்களை மேம்படுத்துவது ஒரு சமூக கடமையாகும்.

கல்விக் கடனுதவி அளிப்பது சமூக நலத் திட்டமாகும். ஒருவகையில் பார்த்தால் அது சமூகத்திற்காக அளிக்கப்பட்ட வங்கி சேவையாகும்.

இந்த கொள்கையை பொதுத்துறை நிறுவனங்களான வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்கள் கருத்தில் கொண்டு தகுதி பெற்ற நபர்களுக்கு நியாயமான கல்விச் செலவுகளுக்கான தொகையை அளிப்பதன் மூலம் அந்த மாணவர்களையும் அவர்களுடைய பெற்றோர்களையும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க முடியும்.

தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேரும் மாணவர்களும் கல்விக் கடனுதவி பெற தகுதியுடையவர்களா? என்பது குறித்து எழுந்த பிரச்சினை மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்பின் மூலம் முடிவிற்கு வந்து விட்டது.

அந்த அறிவிப்பில் நிர்வாக இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேரும் மாணவர்களும், வங்கிகளில் அளிக்கப்படும் கல்வி கடனுதவி தொகையை பெற தகுதியுடையவர்கள் என்றும்,

அனைத்து வங்கிகளும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளின் முதன்மை நிர்வாகிகள் கூட்டம் 27.9.2012 ஆம் தேதி நடைபெற்றது.

அதில் கடனுதவி பெறுவதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறிய பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் அந்த திட்டத்தை நிறைவேற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

அதில் ஒரு பிரச்சினையாக நிர்வாக ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேர்ந்த நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மறுக்கப்படுவது ஒரு குறையாக உள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலை குறித்து கல்வி கடனுதவி திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குழுவில் ஆய்வு செய்யப்பட்டு 27.9.2012 ஆம் தேதி நடைபெற்ற நிர்வாக குழுவிலும் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது.

கல்வி கடனுதவி திட்டத்திற்காக இந்திய வங்கி சங்கக் குழுவின் (IBA Committees) பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட நிர்வாக குழு கீழ்க்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றியது.

நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் (Meritorious Students) தாங்கள் விரும்பிய பாடப்பிரிவு மற்றும் கல்லூரி வந்து செல்வதற்கான வசதி ஆகியவற்றின் அடிப்படையில் நிர்வாக ஒதுக்கீட்டில் ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்தாலும் அவர்களுக்கும் கல்விக் கடனுதவி அளிப்பதற்கான ஒரு பிரிவு சேர்க்கப்பட்டது.

அதேபோல் கல்விக் கடனுதவி கோரிய விண்ணப்பங்களை அந்த விண்ணப்பங்கள் பெறப்பட்ட காலத்திலிருந்து 15 நாட்கள் அதிகபட்சம் ஒரு மாத காலத்திற்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கல்விக் கடனுதவி திட்டத்திற்கான குழு (Indian Bank Association) கடனுதவி பெறுவதற்கான தகுதிகள், கடனுதவி அளிப்பதற்கான செலவினங்கள், கடனுதவி தொகையின் அளவு மற்றும் அதற்கான பொறுப்பினை (Security) ஆகியவை குறித்து பின்வருமாறு பரிந்துரை செய்துள்ளது.

தகுதிகள் (Eligibility Criteria)
மாணவர் தகுதிகள் (Students Eligibility):

அந்த மாணவர் இந்திய நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்

இந்தியா அல்லது வெளிநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் நுழைவுத் தேர்வின் மூலம் மேற்படிப்பில் சேருவதற்கான அனுமதியை (Admission) பெற்றிருக்க வேண்டும்

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் முறையானது 10,+2 கல்விமுறை அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கு பிறகு நடைபெற்றிருக்க வேண்டும்.

இருந்தபோதிலும் சில பட்ட மேற்படிப்புகள் அல்லது ஆய்வுப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வில் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்கிற நிபந்தனை பொருந்தாது.

அத்தகைய நிலையில் வங்கி அந்தப் படிப்பின் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனத்தின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கடனுதவி அளிப்பது குறித்து தீர்மானிக்கலாம்.

(குறிப்பு : மதிப்பெண்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு பெறுவதற்கு தகுதி பெற்றிருந்தாலும், அந்த மாணவர் நிர்வாக ஒதுக்கீட்டில் ஒரு படிப்பினை படிப்பதற்கு தேர்வு செய்திருந்தாலும் அவர்களும் இந்த திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுவதற்கு தகுதியுடையவர்கள்)

கடனுதவி பெறுவதற்கான செலவினங்கள் (Expenses Considered for Loan) :

1.  கல்லூரி / பள்ளி / விடுதி ஆகியவற்றிற்கான கட்டணங்கள்

2.  தேர்வு / நூலகம் / ஆய்வகம் ஆகியவற்றிற்கான கட்டணங்கள்

3.  அயல் நாட்டில் படிப்பதற்கான பயணச் செலவுகள்

4.  தேவைப்பட்டால் கடன் பெறும் மாணவருக்கான காப்பீட்டுப் பிரிமீயக் கட்டணம்

5.  கல்வி நிறுவனத்தால் பில் / ரசீது வழங்கப்பட்ட முன்னெச்சரிக்கை வைப்பீடு, கட்டிடத்திற்கான நிதி, திரும்ப பெறக்கூடிய வைப்பீடு போன்றவை

6.  புத்தகங்கள், உபகரணங்கள், சீருடைகள் வாங்குவதற்கான செலவுகள்

7.  படிப்பை முடிப்பதற்கு கணினி அவசியமென்றால் நியாயமான விலையில் கம்ப்யூட்டர் வாங்குவதற்கான செலவு

8.  படிப்பை முடிப்பதற்கு தேவையான கல்விச் சுற்றுலாக்கள், புராஜெக்ட் வேலைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளுக்கான செலவுகள்

9.  கடனுதவி வழங்கப்படும் பொழுது அந்த மாணவருக்கு வழங்கப்படும் இதர கல்வி உதவித் தொகைகள், கல்வி கட்டண குறைப்பு ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கல்விக் கடனுதவி அளிக்கப்பட வேண்டும்.

கடனுதவி அளிக்கப்படும் தொகையின் அளவு ( Quantum of Finance) :

மேலே குறிப்பிட்ட பத்தி 4(3) ல் கூறப்பட்டுள்ள செலவினங்களுக்காக தேவைப்படும் கடனுதவியை அளிப்பதற்கு கீழ்க்கண்ட வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் படிப்பதற்கு அதிக பட்சமாக ரூ. 10,00,000/-

வெளிநாடுகளில் படிப்பதற்கு அதிக பட்சமாக ரூ. 20,00,000/-

பொருட்பிணை ( Security) :

ரூபாய் 4 லட்சம் வரை, பெற்றோர்களும் கூட்டாக கடன் பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

ரூ. 4 லட்சமும் அதற்கு மேல் ரூ  7.5 லட்சம் வரை, பெற்றோர்கள் கூட்டாக கடன் பெற்றதற்கான ஆவணங்களில் கையொப்பம் இடுவதோடு, மூன்றாம் நபரின் உத்தரவாதமும் துணை காப்புறுதியாக (Collateral Security) வழங்க வேண்டும்.

கூட்டாக கடன் பெற்ற பெற்றோர்களுக்கு அந்த கடனை திருப்பி செலுத்துவதற்கான வருமானம் உள்ளது / வசதியுள்ளது என வங்கி திருப்தியுற்றால் ஒரு மூன்றாம் நபர் உத்தரவாதம் அளிப்பதிலிருந்து விலக்கு அளிக்கலாம்.

ரூ. 7 லட்சத்திற்கு மேல், பெற்றோர்கள் கூட்டு கடனாளியாக இருக்க வேண்டும். தெளிவான விலை மதிக்கக்கூடிய வங்கியால் ஏற்றுக்கொள்ள கூடிய சொத்தினை துணை காப்புறுதியாக அளிப்பதோடு, கடன் தவணைத் தொகையை மாணவரின் எதிர்கால வருமானத்திலிருந்து செலுத்துவதற்கான உத்தரவாதத்தையும் அளிக்க வேண்டும்.

27.9.2012 ஆம் தேதி நடைபெற்ற மறு ஆய்வுக் கூட்டத்தில் (Review Meeting) வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களில் எந்தவொரு இடத்திலும் கல்வி கடனுதவித் தொகை 60% மதிப்பெண் அல்லது அதற்கு மேலும் பெற்றவர்களுக்கு தான் அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடவில்லை.

எனவே நிர்வாக ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கும் கல்வி கடனுதவித் தொகையை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

W. P. NO - 1632/2013, DT - 17.6.2014

கிளை மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பெருமாநல்லூர், திருப்பூர்

                               Vs

1.  A. ரவி
2.  மாவட்ட ஆட்சியர், திருப்பூர்
3.   முதன்மை மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்னை

2014-4-CTC-363

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...