இந்தியாவின் கல்விக் கொள்கை




       னித நாகரீக வளர்ச்சியில், மனிதர்கள் ஒரு கட்டத்தில் விவசாயம் செய்யக் கற்றுக்கொண்டார்கள்.  அந்தக் கல்வியில் எழுத்தறிவுக்கு வேலைகிடையாது. கல், மண்ணிலிருந்து உலோகங்களை எடுக்கக் கற்றுக் கொண்டார்கள். இதிலும் எழுத்தறிவுக்கு வேலையில்லை. ஆனாலும் அது ஒரு கல்வி. அதற்குப்பிறகு உழைப்பு சார்ந்த கல்வி மனிதரால் நிறையக் கற்றுக் கொள்ளப்பட்டது. ஆக, கற்பது என்பதும் எழுத்தறிவு என்பதும் வெவ்வேறானவை என்பது புரியாமல், ""நுனிநாக்கில் ஒரு மொழியைப் பேசுவதே கல்வி என்பது மேல்தட்டு வர்க்கப் புரிதல் ஆகும்.

தமிழ் இலக்கியத்தில் கல்வி, குறிப்பாக எழுத்தறிவு தீவிரமா பேசப்பட்டுள்ளது. ""எழுதத் தெரிந்தவன் கல்வி இருக்கக் கூடியவன், அந்தக் கல்வி இருக்கக்கூடியவனே  கண்ணுடையவன்'' என்கிறார் வள்ளுவர். எழுத்தறிவு பரவலானால்தான் மனிதகுலம் சாதித்தது அல்லது மனித குலத்தின் வளர்ச்சி என்பவை பரவலாகும். எழுத்தறிவு பரவலாகவில்லை என்றால் மனிதகுலம் எதைச் சாதித்ததோ அது பரவலாகாமல் குறிப்பிட்ட சிலருடன் மட்டும் நின்று போகும் என்ற ஒரு யதார்த்த உண்மையை இந்த சமூகம் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. ஆனால், ஆண்ட ஆளும் வர்க்கங்கள் இதைச் சரியாகவே புரிந்து வைத்திருந்தன. எனவே எழுத்தறிவைக் கொடுக்கும்போதே ஒரு குறிப்பிட்ட சாராருக்கு, குறிப்பிட்ட அளவு எழுத்தறிவைக் கொடுத்தால் போதும், இன்னொரு குறிப்பிட்ட சாராருக்கு இன்னும் ஆழமான எழுத்தறிவு கொடுக்கவேண்டும் என்ற ஒரு பாகுபாடு தோன்றியது. இது சாதியரீதியாகவும், வர்க்கரீதியாகவும் வெவ்வேறு கட்டங்களில் இருந்தது. இன்றைக்கு அது ஏழைக்கு ஒரு கல்வி, பணக்காரனுக்கு ஒரு கல்வி என்ற பாகுபாட்டுல வந்து நிற்கிறது.
கல்வியில் பாகுபாடு 

தொழிற்புரட்சிக்கு வித்திட்டவர் என்று ஜவஹர்லால் நேரு பாராட்டப்படுகிறார். அவர் காலத்தில் ஐ.ஐ.டி போன்ற உயர்ந்தபட்ச கல்வியைத் தரக்கூடிய நிலையங்கள் மிகச் சிலவே திறக்கப்பட்டன. ஒருசாராருக்கு மட்டுமே இதில் இடங்கள் கிடைக்கின்ற வகையில் அவை இருந்த நிலையில், இன்னொரு பக்கம் ஐ.டி.ஐ (ITI), பாலிடெக்னிக்குகள் நிறைய திறக்கப்பட்டன. இரண்டாம் ஐந்தாண்டு திட்டக் காலத்தில் உருவாகக்கூடிய கனரகத் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் தொழிலாளருக்கு தேவையான ஒரு கல்விமுறையில் இந்த ஐடிஐ, பாலிடெக்னிக்குகளில் படித்தவர்கள் உருவாக்கப்பட்டார்கள். ""10-ஆம் வகுப்பு முடிச்சுட்டியா - பாலிடெக்னிக் போ, 8-ஆம் வகுப்பு முடிச்சுட்டியா நீ ஐ.டி.ஐக்கு போ'என்றார்கள். பெரும் பகுதி மக்களை அப்படித் தள்ளிவிட்டு, ஒரு சிறிய கூட்டம் மட்டும் உயர்கல்வி ,இன்டர் மீடியட், கல்லூரி, பட்டமேற்படிப்பு என படித்தார்கள். அவர்களுக்கும் மேல் ஆராய்ச்சிக்கு இன்னும் கொஞ்சம்பேர் இருந்தால் போதும். உழைக்கிற வர்க்கத்துக்கு மினிமம் லிட்டரசி மட்டும் கொடுத்தால் போதும் என்பதுதான் நேரு காலத்தின் கல்விக் கொள்கையாக இருந்திருப்பது தெரியவருகிறது. 
இன்றும்கூட, ஐஐடியில் நுழைவுத்தேர்வு எழுதி, அதில் ரேங்க் போடப்பட்டுத்தான் சேர்க்கை நடைபெறுகிறது. அவ்வாறு ரேங்க் அடிப்படையில் ஒரு தாழ்த்தப்பட்ட மாணவர் சேர்ந்தால்கூட அவருக்கு ஒரு வருடம் எக்ஸ்ட்ரா கோச்சிங் என உள்ளது. நுழைவுத்தேர்வில் தேர்ச்சியடைந்தது அவர் ஐ.ஐ.டியில் பயில தகுதியடைந்துவிட்டார்,  அவருக்கு இன்னொரு தகுதி தேர்வு எதற்காக? இந்தப் பாகுபாடு இன்று வரையிலும் உயர் கல்வியில் நீடிப்பதைப் பார்க்கிறோம்.
உயர்கல்வியில் படிப்பவர்கள் வெறும் 10 சதவீதம்தான் என்ற புள்ளி விவரத்தை  அரசாங்கமே வெட்கமில்லாமல் வெளியிடுகிறது. பத்தாண்டு முன்புவரை 7சதவீதம் இப்போது அது 10சதவீதம். அப்படியென்றால் 90 சதவீதம் பேர் ஏன் உயர்கல்வியில் படிக்க வில்லை என்ற கேள்வி வருகிறது. 25 லட்சம் குழந்தைகள் முதல் வகுப்பில் படிக்கிறார்கள் என்றால், தமிழக அளவில் +2 எழுதும் மாணவர்கள் 5லட்சம்பேர்தான். 10ம் வகுப்புக்கு வரும்போது 10 லட்சம் பேர்தான் தேர்வு எழுதுகிறார்கள். 15 லட்சம் குழந்தைகள் காணாமல் போய்விட்டார்கள் +2 வகுப்புக்கு வரும்போது 20 லட்சம் குழந்தைகள் காணாமப் போய்விட்டார்கள். இதற்கு என்ன காரணம்?
இந்தியாவில் 10 சதவிகிதம் பேர்தான் சாதி, பொருளாதாரரீதியில் மேட்டுக்குடியினர். ஒரு குழந்தை எப்படிப்பட்ட கல்வியை, எந்த மாதிரியான சூழலில் பெற்றால் அதன் சிந்தனை நல்ல வகையில் வளருமோ, அப்படிப்பட்ட கல்வி இந்த மேட்டுக் குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. மிச்சமிருக்கிற 90சதவீதம் பேருக்கு, தொடக்கக் கல்வியிலேயே படிப்பின் மீதே வெறுப்பு ஏற்படக்கூடிய வகையில், அந்த கற்றல் சூழல், கற்பித்தல் முறை, பாடத்திட்டம் என்று எல்லாமே அமைந்துவிடுகிறது. இந்த நிலைதான் உங்களுக்கு 90 சதவீத மக்களுக்கு உயர்கல்வியை எட்டாமல் செய்து விடுகிறது. அந்த 90 சதவீதமக்களை நாம் தொடக்கக் கல்வியிலேயே முடிவுக் கட்டிவிடுகிறோம். என்பதுதான் உண்மை.
பொதுப்பள்ளி மூலமான கல்வி 
இந்திய விடுதலைப்போராட்டத்தில் எது முன்வைக்கப் பட்டது, அரசியலமைப்பு எதை முன்வைத்தது, அரசிய லமைப்பு நடைமுறைக்கு வந்தபிறகு கல்விக்குழுக்கள் என்ன கருத்தை முன்வைத்தன என்பதை பார்க்க வேண்டும். விடுதலைப் போராட்டத்தின் ஒருபகுதியாக நடந்த சமூக விடுதலைக்கான போராட்டத்தில் மகாத்மா ஜோதிபா பூலே மகாராஸ்டிராவில் பெண்கல்விக்காக நடத்தியப் போராட்டம்; பாலகங்காதர திலகரை பாரதியார் வேறுமாதிரி அறிமுகம் செய்திருக்கிறார். ஆனால்   ''Educate Women; Loose Nationality''  என்று சொல்கிற திலகரின் அறிக்கையையும், அது சம்பந்தமாக அவர் எழுதின கட்டுரையையும் வாசிக்கிறபோது, பெண்ணுக்குக் கல்வி கொடுத்தால் தேசிய அடையாளமே தொலைஞ்சும் போயிடும் என்ற அவரது கருத்து தெரியவருகிறது. திலகரைப் போன்ற தீவிரமான, மிக முக்கியமான விடுதலைப் போராட்டத் தலைவரே இப்படியான கருத்தை வைத்திருந்த அந்தச்சூழலிலும் அதே மகாராஸ்டிராவில் மகாத்மா பூலே பெண்களுக்காக ஒரு கல்வி நிலையத்தை தொடங்கினார். அவருடைய பள்ளிக் கூடம் அன்றிரவே எரிக்கப்பட்டது. இருந்தபோதிலும், மீண்டும் விடாமல் அந்தப் பள்ளிக்கூடம் கட்டப்பட்டு அது தொடர்ந்து நடந்தது.

காலனியாட்சியின் ஹன்ட்டர் கமிஷனிடம் மகாத்மா பூலே, பின்பு அண்ணல் அம்பேத்கர், கோபாலகிருஷ்ண கோகலே ஆகிய மூவருமே கல்வி அனைவருக்குமானதாக பரவலாக்கப் படவேண்டும். அரசின் பொறுப்பில், அதன் செலவில் கல்வி இருக்கவேண்டும் என்றுதான் கோரி யிருந்தார்கள். இதில் அண்ணல் அம்பேத்கர், "கல்விக்கான உதவியை கடனாகவோ ஸ்காலர்ஷிப்பாகவோ கொடு' என்று கேட்டார். கல்வியே கொடுக்க முடியாது என்று காலனியாட்சி சொன்ன நேரத்தில் கடனாவது ஸ்காலர்ஷிப்பாவது கொடு என்றார். காலனியாட்சியிடமே இவையெல்லாம் கேட்கப்பட்டன என்றால், குடியரசு நாட்டில் அது முற்றிலும் இலவசமாக வழங்கப்படுமென்கிற நம்பிக்கையில்தான் அண்ணல் அம்பேத்கர் கேட்டிருப்பார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதேபோல நேரெதிர் முனைகளில் நின்ற மகாத்மா காந்தி, பகத்சிங் ஆகிய இருவருமே அரசின் முழுப்பொறுப்பிலும் செலவிலுமாக, கட்டணமில்லாமல் தாய்மொழி வழிக்கல்வியை வலியுறுத்தியவர்கள் என்பதையும் கருத்திற்கொள்ள வேண்டும். கட்டாயக்கல்வி, இலவசக் கல்வி, பொதுப்பள்ளி மூலமான கல்வி என்பதுதான் விடுதலைப் போராட்டத்தின் கனவு என்பது நமக்குப் புரிகிறது. இந்தக் கனவைத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதும்போது அண்ணல் அம்பேத்கர் தொலை நோக்குப்பார்வையாக (Vision) மாற்றினார். எனவே அரசியலமைப்புச்சட்டம் எழுதப்பட்ட பிறகும், அதை நாம் வெறுங்கனவு என்று சொல்ல முடியாது. அரசியலமைப்பின் பார்வையாக அது மாறிவிட்டது. 
அரசியலமைப்புச் சட்டத்தின் 45 வது பிரிவு முக்கிய மானது. ""300க்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் சாசன நிர்ணயக்குழுவில் முற்போக்கான சக்திகள் என்று சொல்லப் போனால், என்னோடுகூட குரல் கொடுத்தவர் ஒரே ஒருவர்தான். அவர் பண்டிட் நேரு மட்டுமே'' என்று அம்பேத்கரே குறிப்பிடுகிறார். பாபு  ராஜேந்திரபிரசாத் தொடங்கி பெரும் பகுதியினர் பிற்போக்கு வாதிகளாகவே இருந்த காரணத்தினால்தான் சொத்து அடிப்படை உரிமையானது, கல்வியை அடிப்படை உரிமையாக ஆக்க முடியவில்லை.
கல்வி அடிப்படை உரிமையாகாமல் போனதைக் கண்டு கொதித்த அம்பேத்கர்தான் தன் சட்ட நுணுக்க அறிவைப் பயன்படுத்தி உலக வரலாற்றிலேயே எந்த அரசியலமைப்புச் சட்டத்திலும் இல்லாத வகையில் "அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் என்ற(Directive principles of policy)    கோட்பாட்டை நமது அரசியலமைப்பில் கொண்டுவந்தார். 45வது பிரிவுக்கும் மற்ற பிரிவுகளுக்குமுள்ள பெரிய வித்தியாசம், அது 'The state shall endeavour to provide free and compulsory education for all children upto 14 years of age, within 10 years' என்று சொல்கிறது. "பத்து ஆண்டுகளுக்குள் என்று கால வரையறை விதிக்கப்படுகிறது. இந்திய அரசு, 14 வயதிற் குட்பட்ட அத்தனைப்பேருக்கும் கட்டாயமாக இலவசக் கல்வியை கொடுக்கும், கொடுக்கவேண்டும்.
'The state shall endeavour'   என்பதில் ஓர் அழுத்தம் கொடுக்கிறார். அரசுக்குப் பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்த்துவதற்காகவும், அந்தப் பொறுப்பை அரசுக்கு உணர்த்துவதற்கு நடத்தப்படக்கூடிய கடுமையான போராட்டத்தில் அரசு வேறு வழியில்லாமல் கல்வியை அடிப்படை உரிமையாக மாற்றும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலுமே இந்த வழிகாட்டும் நெறிமுறைகளை 45வது பிரிவை அண்ணல் அம்பேத்கர் வைக்கிறார். இன்னொரு விஷயம், பத்தாண்டுகளுக்குள் என்று சொல்லும்போது 1950- 1960 வரைக்குமான பத்தாண்டுகள். 60க்குள் தொடக்கக்கல்வி கட்டாயமாக, இலவசமாகக் கிடைத்துவிட்டால் 1960-70க்குள் செகண்டரி எஜுகேஷன், 1970- 80க்குள் இன்டர்மீடியேட் எஜுகேஷன், 1980-90க்குள் உயர்கல்வி என இவ்வாறு உயர்கல்வி வரையில் அத்தனையும் கட்டாயமாக, இலவசமாக எல்லாருக்கும் கிடைக்கும். இதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் பார்வை.
1952 முதல் இடைநிலைக் கல்விக்குழு பரிந்துரை, 1964-66 வரை கோத்தாரி கமிஷன், ராமமூர்த்தி கமிஷன் (1991), கடைசியாக யஷ்பால் கமிஷன் (1993) இதுபோல பல்வேறு கமிஷன்கள் மத்திய அளவிலும் சரி, அந்தந்த மாநில அளவிலும் சரி, தமிழ்நாட்டில் முத்துக்குமரன் குழு என இந்த அனைத்து குழுக்களுமே இடையறாது நூலிழை போல் தொடர்ச்சியாக ஒரு பரிந்துரையைக் கொடுத் திருக்கின்றன. அருகமைப்பள்ளி அமைப்பைக் கொண்ட, தாய்மொழி வழியிலான பொதுப்பள்ளிகள் மூலமாகக் கல்வி என்பதுதான் அந்தப் பரிந்துரை. இதில் எந்தக் குழுவிலும் யாருமே மாறுபடவில்லை. தேசியக் கல்வித் திட்டம் 2005-இல்  (NCF) கூட தாய்மொழிவழிக் கல்விதான் வலியுறுத்தப்பட்டுள்ளது. தாய்மொழிவழிக் கல்விதான் சிறந்தது, அதைக் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்கள். எனவே விடுதலைப் போராட்டத் தியாகி களுடைய கனவு எதுவாக இருந்ததோ, இந்திய அரசியல் சட்டத்தினுடைய பார்வை எதுவாக இருந்ததோ அதுதான் கல்விக் குழுக்களுடைய பரிந்துரையாகவும் இருக்கின்றது என்பது நமக்குத் தெளிவாகிறது.
      
இந்தச்சூழலில் 1993-ஆம் ஆண்டின் உன்னிகிருஷ்ணன் வழக்கு மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. இந்த வழக்கில் அரசியலைப்பின் 45வது பிரிவை 'Fundamental duty of Governance'   என்றும் அதில் அடிப்படை உரிமைக்குரிய ஒரு தீவிரம் Force  இருப்பதாகவும் தெளிவாக உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகு, 45வது பிரிவை வெறும் வழிகாட்டி நெறிமட்டுமே என்று சொல்லிவிட முடியாது. (இவ்வழக்கை 2010 செப்டம்பரில் சமச்சீர்க்கல்வி வழக்கிலும் கூட உச்ச நீதிமன்றம் மேற்கோள் காட்டியது.)
ஓர் அடிப்படை உரிமைக்குள்ள அதிகாரமும் பலமும்  அதை செயல்படுத்தும் தேவையும் இந்தப் பிரிவுக்குள் வந்துவிட்டது. இதற்குப் பிறகு சில வழக்குகள் வந்தன. குறிப்பாக மாடர்ன் ஸ்கூல் வழக்கு. 
தனியார் பள்ளிகள் தமது உரிமைக்காக தொடுத்த வழக்கில்கூட, உச்சநீதிமன்றம் தொடக்கக்கல்வி அரசின் பொறுப்பில் செலவில்தான் இருக்கவேண்டும் என்பதையும், இந்தக் கல்வி உரிமையைத் தனியாரால் கொடுக்கமுடியாது என்பதையும் தெளிவாகச் சுட்டிக்காட்டியது. இவை எல்லா வற்றுக்கும் பிறகு 2002-இல் வந்தது 86-வது சட்டத்திருத்தம். இந்திய ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சியை இதுதான் நமக்கு விளக்குகிறது. 2000-வது ஆண்டில் ஐ.நா.சபை வெளியிட்ட புத்தாயிரமாவது ஆண்டு சாசனத்தில் (Millenium Declaration) இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. குழந்தைகள் உரிமை என்பதுவும் மனித உரிமைதான், அவற்றுள் மிக முக்கிய உரிமையாக தொடக்கக்கல்வியை அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமாகத் தரவேண்டும் என்கிறது அந்த சாசனம். எத்தியோப்பியா போன்ற மிகமிகப் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளைக் கருத்திற்கொண்டு 5-ஆம் வகுப்பு வரையிலானதை தொடக்கக் கல்வி என்கிறது அந்த சாசனம். ஆனால் அது இந்தியா போன்ற வளர்ந்த நாட்டிற்கு தொடக்கக்கல்வி என்றால் குறைந்த பட்சம் பள்ளிக்கல்வி என்றுதான் பொருள் கொள்ளவேண்டும். ஆனால் 2000-த்தில் ஐ.நா.சாசனத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு அதை நடைமுறைப்படுத்த அரசியல் சாசனத்தைத் திருத்தி சட்டம் இயற்றுவதற்குப் பதிலாக, "சர்வ சிக்க்ஷ அபியான்  (SSA) என்ற திட்டத்தைக் கொண்டுவந்தார்கள். இது ஒரு திட்டம்  (Project)  மட்டுமே, சட்டம் கிடையாது. "சர்வ சிக்க்ஷ அபியான் "அனைவருக்கும் கல்வி' (மற்றும் இப்போது அனைவருக்கும் இடைநிலைக் கல்வி) மூலம் முதல் நிலையில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை, அதன் தொடர்ச்சியாக 9,10ஆம் வகுப்பு என்றால் கூட, அது கல்வியை அடிப்படை உரிமையாக்கவில்லை. எல்லோருக்கும் தரமான இலவசக்கல்வி என்று பேசவில்லை. இத்திட்டத்திற்கு ஒவ்வொரு மாநிலமும் கேட்கிற நிதியை மத்திய அரசு கொடுக்கும். மாநில அரசு அந்த நிதியை செலவு செய்யும். முதலில் 75 சதவீதம் மத்திய அரசு, 25 சதவீதம் மாநில அரசு என்றிருந்தது. அது படிப்படியாக குறைந்து மத்திய அரசு 25 சதவீதம், மாநில அரசு 75 சதவீதம் என்று தலைகீழாக மாறியது.

இந்தத் திட்டத்தை பொறுத்தவரை, குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய தோல்வி. ஏனென்றால் அது ஒரு course மாதிரிதான். குழந்தைகளைக் கூட்டி வருவது,  அவர்களுக்கு எழுத்தறிவு கொடுப்பது, அவர்களை உரிய வகுப்புகளுக்கு பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது. அப்படி சேர்ப்பதற்க்கு அங்கே பள்ளிக்கூடம் இருக்கவேண்டு மில்லையா? அது இருக்காது. SSAல் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பொறுப்பெடுத்து செயல்பட்டவர்கள் 2010-க்கு பிறகு ""மக்கள் இப்ப எங்களை உதைக்க வந்துட்டாங்க. நாங்க இந்தத் திட்டத்திலிருந்து விலகிக்கிறோம்'' என்று சொல்லுமளவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் மோசமாகிவிட்டது. 2002-இல் கொண்டுவரப்பட்ட 86-வது சட்டத்திருத்தம் ஒரே கல்லில் 3 வேலைகளைச் செய்கிறது. 51A பிரிவைத் திருத்தி எழுதுகிறது. 21A பிரிவை நுழைக்கின்றது. 45-வது பிரிவுக்கு வேறு மாற்று தருகிறது. (It Amends 51A, Inserts 21A and substitutes 45)
பிரிவு 45-இல்  'State shall Endeavour' என்றிருந்தது. 51A என்பது அடிப்படைக் கடமை. இந்த 51Aல் K என்ற பிரிவைச் சேர்த்தார்கள். அந்தப்பிரிவு "பிள்ளைக்குக் கல்வி தருவது பெற்றோர் அல்லது பாதுகாவலருடைய கடமை என்று மாற்றியது. அடுத்து'Right to Freedom of Life'   என்ற பிரிவில் A சேர்த்து 21A கொண்டு வந்தார்கள்.  ''The State shall provide free and compulsory Education for children between six and Fourteen years of Age in the manner as the state may determine by law" (21G) என்று ஆக்கப்பட்டது. "எந்த முறையில் கல்வியை இலவசமாகக் கொடுக்கமுடியுமோ அந்த வகையில் கல்வியை, தான் இயற்றும் சட்டத்தின் மூலமாக அரசு கொடுக்கலாம் என்று 21ஏ பிரிவு  சொன்னது. அதுக்குப்பிறகு 45-வது பிரிவின் நிலைமை என்ன? பிறப்பு முதல் 6 வயதுக்கு முந்தைய முன்பருவக் கல்வியையும், மற்ற பாதுகாப்பையும் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றையும் கொடுக்க வேண்டும், அதற்க்கு அரசு முயற்சிக்க வேண்டும், அது வழிகாட்டும் நெறிமுறைகளில் உள்ளது. இது மிகப் பிற்போக்கான மதவாத தேசிய பி. ஜே. பி. தலைமையிலான கூட்டணி (NDA) ஜனநாயக அரசு கொண்டுவந்த ஒரு சட்டத் திருத்தம்.
இந்த 21ஏ பிரிவை நடைமுறைப்படுத்த காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ(2) அரசின் கபில்சிபல் கொண்டு வந்ததுதான் கல்வி உரிமைச் சட்டம்-2009. இந்தச் சட்டம் கூடுமானவரையில் தாய்மொழியில் கல்வி என்கிறது.     ஏற்கனவே அவர்களது யுபிஏ(1) அரசின் தேசிய கல்வித் திட்டம்- 2005-இல் தாய்மொழி வழியில்தான் கல்வி என்று சொல்லியிருந்ததைக்கூட நடைமுறைப்படுத்த முயலாமல் "கூடுமான வரையில் தாய்மொழியில் என்கிறார்கள். பள்ளி என்ற ஒன்று இருந்தால் போதும் என்றுதான் சொல்லப்படு கிறதே தவிர அது பொதுப்பள்ளியாக, அரசு பள்ளியாக, தரம்மிக்க கல்வியைக் கொடுக்கிற பள்ளியாக இருக்க வேண்டும் என்று எதுவுமே சொல்லப்படவில்லை. அடுத்து, 5-ஆம் வகுப்பு வரையிலான தொடக்கக்கல்வியில் 150 மாணவர்கள் சேருகிறவரை தலைமை ஆசிரியர்னு ஒருவர் இருக்கமாட்டார். அதாவது மேல்முறையீட்டுக்கு பொறுப்பாக யாருமே கிடையாது. அங்கே ஒரு ஆசிரியர் தவறு செய்தால் யாரிடம் போய் குழந்தை முறையிடும்? 250 பேர் வரை 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர், 60க்கு 2, 90க்கு 3, 120க்கு 4. 1 முதல் 5 வரையான வெவ்வேறு வகுப்புகளையும் சேர்த்த 60 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள் என்ன தரமான கல்வியைக் கொடுக்கமுடியும்? ஆக, மீண்டும் 90 சதவீதம் மக்களுக்கு இப்படிப்பட்ட கல்வி உரிமைதான் கிடைக்கும். இதிலிருந்து தப்பிக்கும் வழியாக தனியார் பள்ளிகள் 25 சதவீத மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறது திட்டம். அதாவது, தனியார் பள்ளி என்று ஒன்று இருக்கும். அங்கு வேறு மாதிரியான கல்விமுறை இருக்கும். வகுப்புக்கு ஓர் ஆசிரியர் இருப்பார். வேண்டுமென்றால் அங்கே 25 சதவீதம் பேரைச் சேர்த்துக் கொள்வார்கள் என்கிறது. சரி, இந்த 25 சதவீத குழந்தை களை சமூக  அல்லது பொருளாதார ஒதுக்கீட்டுக்கு இணையாகப் பார்க்க முடியுமா? நிச்சயமாக பார்க்க முடியாது. இந்த ஒதுக்கீட்டின் நோக்கம் வருடத்திற்கு 25 சதவீத குழந்தைகளைக் கொண்டு போய் சேர்ப்பதுதான். இத்தகைய கூறுகளை கொண்ட கல்வி உரிமைச்சட்டம் கல்வி உரிமையை வழங்கவில்லை. மாறாக, குழந்தைகளுக்கு முழுமையான கல்வியை மறுக்கவே செய்கிறது. அது அரசு பள்ளிகளை புறக்கணித்து தனியார் பள்ளிகளை ஊக்குவித்து, கல்வி வழங்கும் தன் பொறுப்பிலிருந்து  அரசு படிப்படியாக விலகிக் கொள்ளும் நயவஞ்சக செயலாகும். அதிகம் போனால் 10 ஆண்டு காலத்திற்குள் பொதுப் பள்ளிக்கு மாணவர்களே இருக்க மாட்டார்கள். இப்பொழுதே ஒரு பொதுப்பள்ளியைச் சுற்றி 4 தனியார் பள்ளிகள். அந்தப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக பொதுப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை  குறைந்து கொண்டேவரும். பொதுப்பள்ளிகள் மூடப்படும் நிலைவரும். 
உதாரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர் களது ஆளுகையின்கீழ் 1996-இல் சென்னை மாநகராட்சி நிர்வாகம் வந்ததிலிருந்து கடந்த 15 ஆண்டுகளில் 30 பள்ளிகளை மூடிவிட்டார்கள். பல நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர் நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் அவர்கள் தரம் உயர்த்தி யிருக்கலாம். ஆனால் 30 பள்ளிகளை மூடிவிட்டார்களே. இந்தச் சூழ்நிலையில் 25சதவீத ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தால் மேற்கொண்டும் பள்ளிகள் மூடப்படும். ஒரு கட்டத்துக்கு மேல் பொதுப்பள்ளியே இருக்காது. முழுக்க முழுக்க தொடக்கக் கல்வி, பள்ளிக் கல்வி என்பது தனியார் களிடமே போய்விடும்.  கர்நாடக மாநிலத்தில் கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டு ஓராண்டு கழிந்து, கடந்த கல்வி ஆண்டில் மூன்றாயிரம் அரசு பள்ளிகளை மூட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு கல்வி உரிமையைக் கொடுத்து விட்டு இந்திய அரசே அதை வேறுவிதமாகப் பறிப்பதற்குச் சமம்தான் இந்த திருத்தங்கள். மேலே சொன்ன காரணங் களுக்காக 86-வது சட்டத் திருத்தத்தை மீண்டும் திருத்திட வேண்டும் என்பதுதான் அடிப்படைக் கோரிக்கை. அரசின் செலவில் பொதுப் பள்ளி மூலமாகக் கல்வி உரிமை என்பதுதான் இன்றைய பிரதான முழக்கம். அருகமைப் பள்ளி அமைப்பைக் கொண்ட தாய்மொழி வழிப் பொதுப்பள்ளி அமையவேண்டும். அப்போதுதான் மகாத்மா ஜோதிபா பூலேவிலிருந்து, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் இன்றுவரையான சமூக விஞ்ஞானிகள், சமூக மாற்றத்திற்கான போராளிகள் வரை அனைவருடைய கனவுகள் மெய்ப்படும். இந்திய அரசியலமைப்பின் தொலை நோக்குப் பார்வை நடைமுறைக்கு வரவும் பயன்படும்.
சமச்சீர் கல்வி பாடத்திட்டம்
தேசிய அளவில் பொதுப்பள்ளி மூலம் கல்வி உரிமை கோரி போராட்டம் நடந்த அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் ஒரு விசேஷ சூழ்நிலையை நாம் உணர்ந்தோம். "1976 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஏற்பிலும் வழிகாட்டு  தலிலும் இருந்துவந்த மெட்ரிக் பள்ளிகளை இனி  சென்னைப் பல்கலைக்கழகம் பராமரிக்காது. அவற்றை மாநில அரசு பள்ளிக்கல்வித்துறையுடன் இணைத்துக்கொள்ள வேண்டுமென முடிவெடுத்தப் பிறகு தமிழ்நாடு அரசு ஒரு முடிவெடுத்தது. இந்தப் பள்ளிகளை மாநில பாடத்திட்டத்துடனான பள்ளிகளாக மாற்றாமல், அவற்றுக்கென்றே தனியாக மெட்ரிக்குலேசன் code என்று ஒரு சட்டத்தையே நிறைவேற்றியது. அதற்கு சட்டமன்றத்தின் அங்கீகாரத்தையும் அளித்து (1976-77) சுயநிதிப் பள்ளிகளாக நடத்தவும், ஆங்கிலவழியில் கல்வி தரவும் செய்யலாம் என்ற நிலையை உருவாக்கியது. ஏககாலத்தில் தனது பொறுப்பிலிருந்து அரசு கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதற்கும், கல்வி வியபாரிகளுக்கும் இந்த மெட்ரிகுலேஷன் code பயன்பட்டது. ஒரு தொண்டுபோல இருந்த கல்வி 1975க்குப் பிறகு வியாபாரமாக மாறத்தொடங்கியது. 1977க்குப் பிறகு புதிதாக எந்தப் பள்ளியையும் இயக்குவதில்லை என்ற நிலையை மேற்கொண்டது அன்றைய அ.தி.மு.க. அரசு. நிதியுதவி, Grant-in-aid கிடையாது என்றெல்லாம் அரசு முடிவெடுத்தது. 
புதிய தாராளமய-தனியார்மயக் கொள்கை 1970களிலேயே தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியில் நுழைந்து விட்டது. இந்த காலகட்டத்தில்தான் சத்துணவு அரசுத் திட்ட மாகிறது. மதிய உணவையும் அரசு திட்டமாக்கி சத்துணவு என்று பெயரிட்டு ஒருபுறம் கல்விக்குச் சேவை செய்வதைப் போல் எம்.ஜி.ஆர் அரசு ஒரு முகத்தைக் காட்டியது.  இன்னொருபுறம் பொதுப் பள்ளிகளை நசுக்கும் ஏற்பாடும் நடக்கத் தொடங்கியது. 1976, 1977-இல் சென்னைப் பல்கலைக்கழகத்திடம் இருந்த மொத்த மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கை வெறும் 29 மட்டுமே. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இருந்தது இரண்டே இரண்டு பள்ளிகள். மற்ற எல்லாப் பள்ளிகளும் அரசு அல்லது             அரசின் உதவிபெறும் பள்ளிகளாக மட்டுமே இருந்தன. 1976-77லிருந்து நான்குவகையான கல்விமுறை, நான்கு வகையான பாடத்திட்டம், பத்தாம் வகுப்பின் இறுதியில் நான்கு வகையான தேர்வுமுறை என்கிற ஒரு சூழல் தமிழகத்தில் உருவானது. இந்தச்சூழல் இரண்டு காரியங் களைச் செய்கிறது. ஒன்று பெரும்பகுதி அரசு, அரசு உதவி பெறுகிற பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள். இந்த ஏழை மாணவர்கள் தமக்கு வழங்கப்படும் கல்வியில் ஏதோவொரு குறை இருப்பதாகவும் தாங்கள் ஏதோவொரு பாடத்திட்டத்தை குறைந்த தர அளவில் பயில்வதாகவும் ஒரு தாழ்வு மனப் பான்மையின் பாதிப்புடன் பயிலத் தொடங்கினார்கள். இந்த மாதிரித் தாழ்வு மனப்பான்மையோடு ஒரு குழந்தை வளரலாமா என்பது ஒரு முக்கியக் கேள்வி. மற்றது, மெட்ரிக் பாடத்திட்டம், ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டம் படிக்கக் கூடிய மாணவர்கள் ஏதோ உயர்ந்தவர்கள் என்றும் அவர்களது பாடத்திட்டத்தில் ஏதோ உயர்ந்த உள்ளடக்கம் இருப்பதாகவும், அவர்களது கற்றல்முறைதான் ஏதோ மிக உயர்ந்தமுறை என்றும் ஒரு மாயத்தோற்றம் உருவானது.
வணிக அளவில் அரசு உதவிபெறும் பள்ளிகளாக இருந்த தனியார் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளி இயங்கிவந்த அதே வளாகத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி களைத் தொடங்க ஆரம்பித்தார்கள். இதனால் படிப்படியாக அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை குறைந்து. மெட்ரிக் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து. ஒரு கட்டத்தில் மெட்ரிக் பள்ளி மட்டுமே நீடித்து இயங்க, அரசு உதவிபெறும் பள்ளி மூடப்பட்டுவிட்டன. சில அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையே இல்லை என்று மே 31-ஆம் தேதி மூடிவிட்டு, அடுத்தநாள் ஜுன் 1-ஆம் தேதி அதே வளாகத்தில் அதே கட்டடத்தில் மெட்ரிக் பள்ளியைத் திறக்கும் நிலையும் உருவானது. அதற்கு எடுப்பான உதாரணம், சுவாமி விவேகனந்தரால் உருவாக்கப்பட்ட இராமகிருஷ்ண மிஷன் நடத்திவருகிற  ஸ்ரீ இராம கிருஷ்ணா மிஷன் வடக்கு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சென்னை பசுலுல்லா சாலையில் இருந்தது. அரசு உதவி பெறும் பள்ளி மூடப்பட்டு அதே வளாகத்தில் மெட்ரிக் பள்ளியாக உருமாறியது. ஒரு நூற்றாண்டிற்கும் முன்பாக உயர்ந்த கல்விச்சேவைக்காக, "செய்கிற தொண்டுகளில் எல்லாம் சிறந்தது ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்ற சிந்தனையில் உருவாக்கப்பட்ட கல்விநிலையங்கள் எல்லாம், அப்பெரியோர்களின் வழிவந்த வாரிசுகளால் வணிக நிலையங்களாக மாற்றப்பட்டு வந்ததை நம்மால் பார்க்க முடிந்தது. ஆக, இரண்டு வகையான பாடத்திட்டம் இருப்பதனால்தான் தனியார் பள்ளிகள் செழிக்கின்றன. இரண்டு பாடத்திட்டம் இருப்பதனால்தான் நான் "வித்தியாசமாக பாடம் நடத்தினேன்' என்று சொல்ல முடிகிறது என்பதை உணர முடிந்தது.
இதில் வேடிக்கை என்னவென்றால், நான்குவகையான பாடத்திட்டங்களையும் ஆய்வு செய்த அனைவரும், அரசு நியமித்த முத்துக்குமரன் குழு உட்பட, இந்த நான்கு பாடத் திட்டங்களின் உள்ளடக்கங்களும் ஏறத்தாழ ஒரே மாதிரி யாக, பெரிய வித்தியாசமின்றி இருப்பதாகத்தான் ஆய்வுப் பூர்வமாக அறிக்கை அளித்தார்கள். உள்ளடக்கத்தில் பெரிதாக வித்தியாசம் இல்லாதபோது ஏன் மாணவர்கள் தழ்வுமனப்பான்மையில் புழுங்க வேண்டும்? எதற்கு வெவ்வேறு பெயர்? ஒரே பாடத்திட்டம், ஒரே பாடநூல், ஒரே தேர்வுமுறை, ஒரே பள்ளிக்கல்வி வாரியம் இருந்தால் போதாதா என்று கேள்வி எழத் தொடங்கியது. 

கல்வியாளர்கள், இடதுசாரி மாணவர் மற்றும் ஆசிரியர் இயக்கங்கள் உள்ளிட்ட 40க்கு மேற்பட்ட அமைப்புகளை உள்ளடக்கிய - முனைவர். மார்க்கண்டன், வசந்தி தேவி, எஸ்.எஸ்.இராஜகோபாலன் போன்றோரை ஒருங்கிணைப் பாளர்களாக கொண்ட கல்வி என்ற கூட்டமைப்பு 2006-இல் மக்கள் பிரகடனம் என்ற ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் "பள்ளிக்கல்வியில் ஒரே வாரியம், ஒரே பாடத்திட்டம் போதும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் சமச்சீர்க்கல்வியை நடைமுறைப்படுத்துவதாக முதன் முதலில் தேர்தல் வாக்குறுதியாக இடதுசாரிக்கட்சிகள் தவிர திமுக குறிப்பிட்டிருந்தது. இந்தத் தேர்தல் அறிக்கைதான்,             அனைத்து வாரியங்களையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் களத்திற்கு சமச்சீர்க்கல்வி என்ற பெயரில் எடுத்துச் சென்றது. திமுக ஆட்சியில், 2009 நவம்பர் 27 தேதியிட்டு ஆளுநரால் அவசரச் சட்டம் மூலம் சமச்சீர்க்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது. குறைந்தது நான்கு பாடத்திட்டங்கள் ஒருங்கிணைத்து ஒரே பாடத்திட்டம் நடைமுறைக்கு வருவதே ஒரு படி முன்னேற்றம் என்கின்ற அளவில் அந்தப் பொதுப் பாடத்திட்டத்தை அனைவரும் வரவேற்றார்கள். பொதுப் பாடத்திட்டத்திற்கான இந்த குறைந்தபட்ச சமச்சீர்க்கல்விச் சட்டத்தைக்கூட ஏற்க விரும்பாத முடியாத மெட்ரிக் பள்ளிகள் உயர்நீதிமன்றத்தை அணுகினார்கள். தோற்றுப் போனார்கள். பொதுப் பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்தது.
2011-இல் அதிமுக ஆட்சி வந்தது. ஜெயலலிதா முதல்வரானதும் பொதுப் பாடத்திட்டத்தையுங்கூட கைவிடும் வகையில், சமச்சீர்க்கல்வித் திருத்தச் சட்டத்தை அதிமுக அமைச்சரவை முன்மொழிந்தது. மே 22-இல் அமைச்சரவை முடிவு வெளியான உடனே இது முற்றிலும் தவறான நடவடிக்கை, முன்னுக்குச் செல்ல வேண்டிய சீர்திருத்தங் களைப் பின்னுக்கு இழுப்பதான செயல். பொதுப் பாடத் திட்டத்தைக் கைவிட்டு மீண்டும் பழைய பாடப்புத்தகங்களை வழங்குவதென்ற அமைச்சரவை முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று பொதுப் பள்ளிக்கான மாநிலமேடை அன்றே கண்டனம் தெரிவித்தது. பின்பு பல்வேறு  அரசியல் இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற கோரிக்கையைப் பலமாக எழுப்பின. ஆனாலும் அரசு சட்டமன்றத்தில் சமச்சீர்க் கல்வியைக் கைவிடுவதற்கு சட்டம் இயற்றியது. களத்தில் இறங்கிப் போராடிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் இந்தப் பிரச்சினையை உயர்நீதிமன்றத்தில் சந்திப்பதற்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தயாரானது.
இந்தச் சட்டத்திருத்தத்தை எதிர்க்கக்கூடிய பல மனுக்கள் பல தனிநபர்களால் தாக்கல் செய்யப்பட்டன.  ஆனால் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் மனு,  அதிமுக அரசின் தவறான நிலைப்பாட்டை அம்பலப்படுத்தும் வகையில் பல செய்திகளைக் குறிப்பிட்டிருந்தது. மிகமிக முக்கியமாக சமச்சீர்க்கல்விப் பாடநூல்களையே அழிப்பதற்கு அரசு தயாராகி விட்டது என்று ஒரு செய்தி வெளியானதும், அவ்வாறு பாடநூல்களை அரசு அழிக்க அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கையை உயர்நீதிமன்றத்தில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை முன்வைத்தது. பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் அரசு தலைமை வழக்கறிஞருக்கு எழுதிய கடிதத்தில், வழக்கினுடைய அடுத்த விசாரணை வரை பொதுப் பாடத்திட்ட நூல்களை அழிப்பதில்லை என்ற வாக்குறுதியும் கொடுத்திருந்தார். சமச்சீர்க்கல்விப் பாடநூல் களை அழிக்கும் எண்ணமே அரசுக்கு இல்லை என்று குறிப்பிடவில்லை. அடுத்த நீதிமன்ற விசாரணை வரைக்கும் சமச்சீர்க் கல்விப் பாடநூல்களை அழிக்கமாட்டோம்னு அரசு சொன்னதிலிருந்தே பாடநூல்களை அழிப்பதற்கான திட்டம் அதிமுக அரசுக்கு இருந்திருப்பதை அறியமுடிந்தது. அரசின் நிலை என்னவாக இருக்கும், பாடத்திட்டத்தை ஆய்வு செய்வதற்காகத் தள்ளி வைக்கிறதா அல்லது திட்டத்தையே கைவிடப் பார்க்கிறதா என்ற சந்தேகம் அங்கேயே எழுந்து விட்டது. இந்தத் திட்டத்தைக் கைவிடக் கூடாது, தொடர்ந்து நடத்தவேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவு கிடைத்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு. உச்சநீதிமன்றமும் தொடர்ந்து பொதுப்பாடத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தீர்ப்புக் கூறியது.
இவற்றின் மூலமாக இரண்டு செய்திகள் தெளிவாகின. ஒன்று, முதல் சுற்றில் தோற்றுப்போன தனியார் பள்ளிகளின் தூண்டுதலின் பேரிலேயே அதிமுக அரசு சமச்சீர்க் கல்வித் திட்டத்தைக் கைவிட முன்வந்தது என்பதோடு, உயர் நீதி மன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் அரசுடன் இணைந்து தனியார் பள்ளிகள் மிக வலுவான வாதங்களை முன் வைத்தார்கள். அதிமுக அரசுக்கும், தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கும் இருக்கக்கூடிய அந்தக் கூட்டு ஒரு மக்கள்விரோதக் கூட்டு என்பது அம்பலமானது.
பாடத்திட்டத்தில் சூழ்ச்சி செய்த அதிமுக அரசு, தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தைக் கட்டுப் படுத்துவதிலும் சூழ்ச்சியைத் தொடர்ந்தது. கட்டணத்தைக் கட்டுப்படுத்த சட்டம் இயற்றிவிட்டு கட்டணத்தைத் தீர்மானிக்க ஒரு குழுவையும் அமைத்துவிட்டு, அந்தக் குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கோ அல்லது குழுவின் பரிந்துரை பள்ளிகளால் நடைமுறைப் படுத்தப்படுகிறதா என்று கண்காணிப்பதற்கோ, மீறக்கூடிய பள்ளிகளின் மீது புகார் வந்தால் நடவடிக்கை எடுப்பதற்கோ எந்த வழியும் தேடாமல் தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்திவிட்டதாக அதிமுக அரசு பெருமைப்பட்டுக் கொண்டது. அதன் விளைவாகவே இந்தியாவின் கல்வி வரலாற்றிலேயே முதல்முறையாக தனியார் பள்ளி மாணவர் களின் பெற்றோர்கள் தெருவில் இறங்கிப் போராடத் தொடங் கினார்கள். இந்தப் போராட்டத்தில் உருவான கோரிக்கை முழக்கம்தான் தனியார் பள்ளிகளை இனியும் நம்பத் தயாராக இல்லை, பொதுப்பள்ளிகள் மூலமாகக் கல்வி உரிமை வேண்டும் என்ற முழக்கம் வலுத்திருக்கிறது.
பொதுப்பள்ளிக்கான பயணம் மேற்கொள்ளும்போது அதன் ஒருபடிதான் பொதுப்பாடத்திட்டம், எனவே அதைக் கைவிடுவதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பொதுப்பாடத்திட்டத்தை மட்டும் நடைமுறைப் படுத்த உதவவில்லை, அதையும் தாண்டி கல்வி என்பது அடிப்படை உரிமை என்பதையும் நிலைநிறுத்தி உள்ளது.
சி.பி.எஸ்.சி பாடத்திட்டதிற்கு மாறும் தனியார் பள்ளிகள்
சி.பி.எஸ்.சி என்கிற மத்திய அரசின் கல்வி வாரியம் பள்ளிகளுக்கு, தனியார் பள்ளிகளுக்கு ஏற்பளிக்கின்ற அமைப்பு மட்டுமே. அந்தத் தனியார் பள்ளிகளைக் கண் காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ எந்தவிதமான விதிகளோ ஏற்பாடோ நிர்வாக இயந்திரமோ அதனிடம் இல்லை. எனவே சி.பி.எஸ்.சி விதிகளின்படியே கூட, அதன் பாடத் திட்டங் களைப் பின்பற்றுகிற தனியார் பள்ளிகளை மாநில அரசின் சட்டங்கள்தாம் கட்டுப்படுத்த வேண்டும். 1993-ஆம் ஆண்டின் சுமையில்லாக் கல்வி(­Learning without burde)  பற்றிய பேராசிரியர் யஷ்பால் குழுவின் பரிந்துரையில் மிக முக்கியமானது "மத்திய கல்வி வாரியம் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயாக்களை மட்டும்தான் கட்டுப்படுத்த முடியும். மற்ற தனியார் பள்ளிகள் அந்தந்த மாநில அரசின் பள்ளிக் கல்வித் துறையோடு இணைந்து செயல்பட வேண்டும் என்பதாகும். இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, இனி எந்தத் தனியார் பள்ளிக்கும் இத்தகைய ஏற்பு தரவேண்டாம் என்ற ஆணையை இதுவரை சி.பி.எஸ்.சிக்கு பிறப்பிக்காதது ஏன் என்பது ஒரு முக்கியமான கேள்வி.
மாநில அரசிடம் வெவ்வேறு வகையான பாடத்திட்டங்கள் இருந்த காலத்தில் தங்களை வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள மெட்ரிக் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கி வந்த தனியார் பள்ளிகள் பொதுப்பாடத்திட்டம் வந்தவுடன் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்திற்கு மாறுகிறார்கள் என்றால் வணிக நோக்கத்தைத் தவிர வேறு என்ன காரணம் இருக்கமுடியும்? வேறுபடுத்திக் காட்டினால்தான் மேலானது என்று கூற முடியும். மேலானது என்று கூறிக்கொண்டால்தான் சந்தையில் நிற்க முடியும். வணிகச் சந்தையின் இந்தக் கோட்பாட்டைப் பின்பற்றியே மெட்ரிக் பள்ளிகள் சி.பி.எஸ்.சி பள்ளிகளாக மாறுகின்றன. இப்படி மாறக் கூடிய பள்ளிகள் எவையும் எவ்வித ஒப்பாய்வும் செய்து பொதுப் பாடத்திட்டத்தைவிட சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் சிறந்தது என்று நிரூபித்தபின் மாற்றிக் கொள்ளவில்லை. கற்றல் சூழலிலோ, ஆசிரியர் பயிற்சியிலோ எந்த மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை. அனைத்துவகைப் பள்ளிகளுக்கும் ஆசிரியர் பயிற்சி மாநில அரசாலேயே வழங்கப்படுகிறது. பட்டங்கள் பல்கலைக் கழகங்களினாலேயே வழங்கப் படுகின்றன. இவற்றை யெல்லாம் புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் பெற்றோர் இல்லை என்ற, பொதுமக்களின் அறியாமை நிலையைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் பள்ளிகள் தங்களின் இலாபவேட்டைக்கு மாணவர்களை இரை யாக்குகிறார்கள். இதற்கு மத்திய, மாநில அரசுகளும் துணை போவதுதான் வேதனைக்குரியது.
முப்பருவக் கல்விமுறையும் கிரேடுமுறையும்
முப்பருவக் கல்விமுறையையும் கிரேடுமுறையையும் மேலோட்டமாகப் பார்த்தால் வரவேற்கத்தக்கதாக இருந் தாலும் ஆழமாகப் பார்த்தால் அதனுள்ளிருக்கும் சூழ்ச்சி புலப்படும். டெல்லி- பல்கலைக்கழகத்தில் தற்பொழுது செமஸ்டர் முறை பற்றி நடந்துவரும் விவாதம் இந்த சூழ்ச்சியைப் புரியவைப்பதற்கும் பயன்படும். ஒரு மாணவனுக்கு ஓர் ஆண்டு முழுவதும் பாடங்களை அலசிப் பார்க்க வாய்ப்பு தராமல் சில பாடங்களை மூன்று மாதங் களுக்குள்ளேயே அவர் முடித்துவிட வேண்டும். அடுத்தப் பருவத்திற்கு வேறுபாடம் என்பது இன்றைய தமிழக கற்றல் சூழலில் சரியான அணுகுமுறையாக இராது. வணிகரீதியாக நடைபெறும் பள்ளிகளுக்கும், தனியார் பதிப் பகங்களுக்கும் வேண்டுமானால் இது நல்ல செய்தியாக இருக்கலாம். கிரேடு முறையில்கூட ஐந்து வகுப்புகளையும் சேர்ந்த 60 மாணவர்களை 2 ஆசிரியர்கள் தொடர்ந்து கற்பித்து முழுமையான கற்றல் திறனை மதிப்பீடு செய்ய வாய்ப்புள்ளதா என்கின்ற கேள்வி எழுகிறது. சாதீய பொருளாதாரப் பாகுபாடு ஆழமாக உள்ள இந்த சமூகத்தில் இந்த மதிப்பீட்டு முறை எந்தளவிற்கு கல்வித்தரத்தை உயர்த்தப் பயன்படும் என்பதும், பத்தாம் வகுப்பின் இறுதியில் பொதுத்தேர்வு இல்லை என்றால் அந்த மாணவரின் தொடர்கல்வி எவ்விததில் உத்தரவாதப்படுத்தப்பட போகிறது என்பதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய கேள்விகள்.
இறுதியாக, கோத்தாரி கல்விக்குழு உள்ளிட்ட பல்வேறு கல்வி குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட அருகாமைப் பள்ளி அமைப்பில் பொதுப்பள்ளி முறைமத்தை உருவாக்கி வழங்கப்படும் உரிமையே உண்மையான கல்வி உரிமையாகும். 86-வது சட்டத்திருத்தத்தில் பாதகமான கூறுகளை சரிசெய்ய இந்திய அரசியலமைப்பு சட்டம் மீண்டும் திருத்தப்பட்டு, அரசின் முழு பொறுப்பையும் செலவிலும்  அருகாமைப்பள்ளி அமைப்பின் தாய்மொழி வழி பொதுப்பள்ளி முறைமத்தை உருவாக்கி கல்வி உரிமை வழங்கிட வேண்டும். கல்வியில் வணிக மையத்தை ஒழித்துவிட்டு அனைத்து குழந்தைகளுக்கும் தரமான இலவச கல்வியை தரவேண்டும்.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...