எந்தெந்த தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் ?

1. ஜனவரி 26 (குடியரசு தினம்)
2. மே 1 (உழைப்பாளர் தினம்)
3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்)
4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி)

2. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டம் நடைபெறுமா?

ஆம். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில்தான் கிராம சபை கூட்டம் நடைபெறும்.

3. கிராம சபை கூட்டம் எந்த இடத்தில் நடக்கும்?

உங்கள் கிராம பஞ்சாயத்திற்கு உட்படப் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும்.

பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, வேறு ஒரு பொது இடத்திலோ கிராம சபை கூட்டம் நடைபெறும்.

4. கிராம சபையில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?

கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் கிராம சபையில் கலந்துகொள்ளலாம்.

ஆண்கள், பெண்கள், முதியவர்கள், பட்டியல் பிரிவினர் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.

5. கிராம சபையின் தலைவர் யார்?

கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவர். தலைவர் இல்லாதபோது
துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார்.

துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் கிராம சபையின் தலைவராக செயல்படலாம்.

இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார்.

6. கிராம சபையில் குறைந்தபட்சம் எத்தனைப் பேர் கலந்துகொள்ள வேண்டும்?

உங்கள் கிராம பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 பேர் என்றால், குறைந்தபட்சம் 50 பேர் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும்.

அப்போதுதான் கிராம சபை ஏற்றுக்கொட்டப்படும். அதேபோல,
உங்கள் கிராமத்தின் மக்கள் தொகை
501 முதல் 3000 வரை என்றால் 100 பேர் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும்.

3001 முதல் 10,000 பேர் கொண்ட கிராமத்தில் 200 பேரும் ,

10,000 க்கு மேல் மக்கள் தொகை இருப்பின் 300 பேரும்
கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை.
 [அரசாணை நிலை எண் 130 ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை நாள் 25.09.2006 ]

7. தேவையான குறைவெண் வரம்பு இல்லாதபோது கிராம சபையின் நிலை என்ன?

அரசாணையில் குறிப்பிட்டுள்ள குறைவெண் வரம்பு இல்லாதபோது கிராம சபை கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

8. கிராம சபை தீர்மானம் எங்கெல்லாம் செல்லுபடி ஆகும்?

சட்ட மன்ற நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கு உண்டு.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட எந்த ஒரு கிராம சபை தீர்மானமும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

அரசு அலுவலகங்களிலும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

9. எந்தெந்த விசயங்களுக்காகக் கிராம சபையில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றலாம்?

உங்கள் கிராமத்திற்கு சம்மந்தப்பட்ட எந்த ஒரு விசயத்திற்கும், தேவைக்கும் கிராம சபை தீர்மானம் நிறைவேற்றலாம்.

பக்கத்துக்குக் கிராமத்தின் பிரச்சனையைத் தீர்க்கவோ அல்லது மாநில அளவில் சில கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்றோ உங்கள் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுவது பயனளிக்காது.

உதாரணமாக, உங்கள் கிராமத்தில் இருக்கும் மதுக்கடையை மூடத் தீர்மானம் கொண்டுவரலாம்.

ஆனால், தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றுவது பயனளிக்காது.

மேலும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதாக உங்கள் கிராம சபை தீர்மானம் இருக்க வேண்டும்.

அதாவது மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம், தனி நபர் உரிமை போன்ற விசயங்களை மீறுவதாக உங்கள் கிராம சபை தீர்மானம் இருக்கக் கூடாது.

10. தீர்மானம் இந்த வடிவில்தான் இருக்கவேண்டும் என வரைவு ஏதும் உள்ளதா?

இல்லை. இயல்பான வாக்கியங்களைக் கொண்டே கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றலாம்.

இந்த வடிவில்தான் இருக்கவேண்டும் என எந்த நிபந்தனையும் இல்லை.

11. மக்கள் முன்மொழியும் தீர்மானத்தை பஞ்சாயத்துத் தலைவரோ அதிகாரிகளோ நிராகரிக்க முடியுமா?

முடியாது. கிராம சபை மக்களுக்கான சபை.

பஞ்சாயத்துத் தலைவரோ, அதிகாரிகளோ மக்களின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது.

கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சரி அல்லது தவறு என முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.

12. கிராம சபை தீர்மானத்தின் நகலைக் கிராம மக்கள் பெறமுடியுமா?
அதற்குக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டுமா?

கிராம சபை தீர்மானத்தின் நகலைக் கிராம மக்கள் நிச்சயம் பெறமுடியும்.

அதற்குக் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

13. கிராம சபையில் எத்தனைத் தீர்மானங்கள் நிறைவேற்றலாம்?

இத்தனை தீர்மானங்கள்தான் நிறைவேற்ற வேண்டும் என்ற வரையறை ஏதும் இல்லை.

எண்ணிக்கை வரம்பு இல்லை என்ற காரணத்தால் எண்ணற்ற தீர்மானங்கள் நிறைவேற்றுவதில் பயனில்லை.

முக்கியமான மற்றும் குறிப்பிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி அதை நடைமுறைப்படுத்தி பயன்பெற வேண்டும்.

14. கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்பு யாருடையது?

பஞ்சாயத்துத் தலைவர், துணைத்தலைவர் , வார்டு உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகளே கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்புடையவர்கள்.

 கிராம இளைஞர்கள் , தன்னார்வலர்கள் முயற்சி எடுத்து, அரசு அதிகாரிகளுக்கு மற்றும் தலைவர் உட்படப் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு நினைவூட்டல் அனுப்பி கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்தலாம்.

15. கிராம சபை தீர்மானம் எத்தனை நாட்களுக்குச் செல்லுபடி ஆகும் ?

கிராம சபை தீர்மானம் காலாவதியே ஆகாது.

ஒருமுறை சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை,
சூழலின் தன்மை கருதி விவாதித்து [மறுபரிசீலனை செய்தோ, மாற்றம் செய்தோ அல்லது மறுத்தோ]
வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் முந்தைய தீர்மானம் செயல் இழக்கக் கூடும்

16. சிறப்பு கிராம சபை என்றால் என்ன?

தமிழகத்தில் நான்கு நாட்கள் கிராம சபை கூட்டம் கட்டாயம் நடைபெறும்.
1. ஜனவரி 26 (குடியரசு தினம்)

2. மே 1 (உழைப்பாளர் தினம்)

3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்)

4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி)

இந்தக் கிராம சபைகளையும் தாண்டி கூடுதலாகக் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மக்கள் நினைத்தால் கிராம சபை கூட்டத்தை நடத்தலாம்.
அவ்வாறு கூட்டப்படும் கிராம சபை, சிறப்பு கிராம சபை என்று அழைக்கப்படும்.

17. சிறப்பு கிராம சபையைக் கூட்ட பஞ்சாயத்துத் தலைவர் முன்வராவிட்டால் என்ன செய்வது?

சிறப்பு கிராம சபை கூட்டத்தை கூட்டப் பஞ்சாயத்து தலைவர் மறுத்தால்,
மக்கள் தங்களுக்குள் ஒரு தலைவரை நியமித்துக் கொண்டு
[சிறப்பு கிராம சபைக்கு மட்டும் அவர் தலைவராக இருப்பர்] சிறப்பு கிராம சபையைக் கூட்ட மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கலாம்.

18. கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

கிராம இளைஞர்கள் , தன்னார்வலர்கள் முயற்சி எடுத்து, அரசு அதிகாரிகளுக்கு மற்றும் தலைவர் உட்படப் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு நினைவூட்டல் அனுப்பித் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்தலாம்.

19. முன்னுதாரண கிராம சபையில் காணப்படும் முக்கிய விசயங்கள் என்னென்ன?

* மக்கள் சொல்வதை தலைவர் மற்றும் அதிகாரிகள் கவனமாக கேட்பது
* மக்களின் சந்தேகங்களுக்கு முறையாகப் பதில் அளிப்பது
* மகளிர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கு உரிய அங்கீகாரம் வழங்குதல்
* பஞ்சாயத்தின் வரவு செலவு கணக்கை மக்கள் முன் வாசித்துக் காட்டுதல்
* கிராம வளர்ச்சிக்காக விவாதிப்பது

20. கிராம சபையில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டுமா? அதிகாரிகள் வந்தால் நாற்காலியில் அமரலாமா?

அனைவரும் தரையில்தான் அமரவேண்டும்.
முதலமைச்சரே வந்தாலும் கிராம சபையில் தரையில்தான் அமரவேண்டும்.

21. பக்கத்து ஊர் கிராம சபையில் நான் கலந்து கொள்ளலாமா?

கலந்துகொள்ளலாம்.

ஆனால், உங்களின் வாக்கு எந்தப் பஞ்சாயத்தில் உள்ளதோ அந்தக் கிராம பஞ்சாயத்தின் கிராம சபைக்கு மட்டுமே நீங்கள் உறுப்பினர்.

மற்றோரு கிராமத்தின் கிராம சபையில் நீங்கள் பார்வையாளராக இருக்கலாம்.

22. இவர் கிராம சபையில் கலந்துகொள்ள கூடாது என யாரையாவது ஒதுக்கி வைக்க முடியுமா?

முடியாது.
உங்கள் கிராம பஞ்சாயத்தின் வாக்காளர் அனைவரும் உங்கள் கிராம சபையின் உறுப்பினர் ஆவார்கள்.

எனவே, அவர்கள் அனைவரும் கிராமசபையில் கலந்துகொள்ள உரிமை படைத்தவர்கள்

உள்ளாட்சி அமைப்புகள்: அடிப்படை கேள்விகள்

1. ஏன் இதை புதிய பஞ்சாயத்து என அழைக்கிறோம்?

1993 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பஞ்சாயத்துச் சட்டம்,
இதற்கு முன்பு இருந்த பஞ்சாயத்து சட்டத்தில் இல்லாத பல புதிய சரத்துக்களை கொண்டிருந்தது.

அதில் குறிப்பாக;
மாநில நிதி ஆணையம்,
மாநில தேர்தல் ஆணையம்,
கிராம சபை,
மகளிர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கு இடஒதுக்கீடு போன்ற முக்கிய சரத்துக்களை இருந்தன.

எனவே இப்புதிய பஞ்சாயத்துச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகள் என்பதால் இவற்றை புதிய பஞ்சாயத்து அமைப்புகள் என அழைக்கிறோம்.

2. பஞ்சாயத்து நிர்வாகம் எத்தனை அடுக்குகளைக் கொண்டது?

மூன்று அடுக்குகளைக் கொண்டது.
1. கிராம பஞ்சாயத்து,
2. பஞ்சாயத்து ஒன்றியம்,
3. மாவட்ட பஞ்சாயத்து

3. தமிழகத்தில் மொத்தம் எத்தனைக் கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன?

தமிழகத்தில் மொத்தம் 12,524 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன

4. நகர உள்ளாட்சி அமைப்புகள் என்னென்ன?

பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகியவை நகர உள்ளாட்சி அமைப்புகள் ஆகும்

5. ஒரு கிராம பஞ்சாயத்து எத்தனை உட்கிராமங்களை கொண்டிருக்கும்?

இது ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திற்கும் மாறுபடும்.

ஒரே ஒரு உட்கிராமம் உள்ள பஞ்சாயத்தும் உள்ளது ,

பல உட்கிராமங்கள் உள்ள கிராம பஞ்சாயத்தும் தமிழகத்தில் உள்ளது.

சராசரியாக ஏழு முதல் எட்டு உட்கிராமங்களை கொண்டிருக்கும் ஒரு கிராம பஞ்சாயத்து. 

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...